Friday, September 9, 2011

மைய நரம்பு முறிவு

மு. இன்றைக்கு அலுவலகத்திற்கு வந்திருந்தான். ஆம், என்னுடைய ‘மர்ம நாவல்’ என்ற சிறுகதையில் அறிவின் எல்லையைத் தேடிப்போய் காணாமல் போவானே அவனேதான். அந்த சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதிலிருந்து மு வுக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருக்கும் அவன் மகிழ்ச்சியாக இருப்பான் என்ற கற்பனையில் இருந்தேன். எலும்பும் தோலுமாய் வற்றிப்போய் இருந்தான். நெற்றி நிறைய விபூதி. கழுத்து நிறைய ருத்திராட்ச மாலை. கையிலிருந்த மஞ்சள் பை நிறைய முருகன் துதிப் பாடல்கள். திருச்செந்தூர் செந்திலாண்டவர் குல தெய்வமாம். தமிழின் முதல் பின் நவீன கதாபாத்திரங்களில் ஒருவனான மு வுக்கா இந்த கதி?

கழிந்த பங்குனி உத்திரத்திற்கு சீவலப்பேரி சுடலைமாடனுக்கு கிடா வெட்டி பொங்கலிட்டிருக்கிறான். முருகனின் அறுபடைவீடுகளுக்கும் அலகு குத்தி ஏரோப்பிளேன் காவடி எடுத்திருக்கிறான். ஐம்பத்தி இரண்டு வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் முருகன் கோவில் முருகன் கோவிலாக பால்குடம் எடுத்திருக்கிறான். பிபிஓ ஒன்றில் வேலை பார்த்திருக்கிறான். மு வுக்கு சம்பளம் நிறைய. 94இல் அவனுக்கு நரம்பு முறிவு ஏற்பட்டதில் இரவு ஒழுங்காக தூக்கம் வராது. அதனால் நைட் டூட்டி பார்ப்பதில் அவனுக்குச் சிக்கல் ஏதுமில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தூங்குவான் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்வான். 96இல் அவனுக்கு ஏற்பட்ட இரண்டாவது மைய நரம்பு முறிவு (central nervous breakdown) காரணமாக கை கால் எப்போதும் உதறல் எடுத்துக்கொண்டேயிருக்கும். அதுவும் கூட ஒரு வகையில் மு வுக்கு சௌகரியமாகவே போயிற்று. கணிணியின் விசைப்பலகையில் கையை வைத்தானென்றால் கட கட வென்ற உதறலே தட்டச்சு செய்துவிடும்.

பிபிஓவில் முதலில் மு வுக்கு பெயர் ஸ்டான்லி. ஸ்டான் என்பது செல்லச் சுருக்கம். அமெரிக்க கைபேசி பயனர்கள் சொல்லும் ஆவலாதிகளையெல்லாம் பொறுமையாகக் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிகளை சாட்டில் தட்டச்சு செய்து கொண்டேயிருக்கவேண்டும்.  ஸ்டான்லிக்கு பதவி உயர்வு வந்து பத்து ஆவலாதி களைபவர்களை மேய்க்க வேண்டி வந்தபோதுதான் பிரச்சினை ஆரம்பித்தது. ஸ்டானின் பிரிவில் வேலை துரிதமாக நடக்கவில்லை. டாய்லெட்டில் தண்ணீர் போகாமல் அடிக்கடி பிரச்சினை வந்தது. டாய்லெட் அடைப்பிற்கும் வேலைத்தேக்கத்திற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மு நினைத்தது உண்மையாய் போயிற்று. இரவு முழுக்க மு கணிணி முன் உட்கார்ந்து தட்டிக்கொண்டே இருக்க அவன் குழுவினர் இரவுகளில் எல்லோரும் என்ன செய்வார்களோ அக்காரியங்களைத் திறம்பட செய்துகொண்டிருந்தார்கள். மு டி.ஸ். எலியட்டின் புகழ் பெற்ற கவிதை வரியான Jug Jug to dirty ears என்பதை முனகிக்கொண்டு வாளாவிருந்தான். உபயோகித்த ஆணுறைகள் டாய்லெட் குழாயை அடைக்கும் அளவுக்கு இரவின் நற்செயல்கள் பெருகிவிட்டிருந்தன. மு ஒரு பெரிய பட்டை தீட்டிய கத்தி ஒன்றை வாங்கி ஸ்டான்லி கையில் கொடுத்துவிட்டான். ஸ்டான்லி ஒரு நள்ளிரவில் தன் ஜோல்னாப் பையில் இருந்து பள பளக்கும் கத்தியை எடுத்து மேஜை மேல் வைத்துவிட்டு ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டேயிருந்தான். ஜோடிகள் கழிப்பறையை ஒட்டிய டேபிள் டென்னிஸ் அறைக்குப் போவதை கவனித்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த அறையை நோக்கி கத்தியோடு பாய்ந்தான். ஊழலுக்கு எதிரான போராட்ட வழிமுறைகளை விவாதித்துக்கொண்டிருந்த ஜோடிகள் அரை குறை ஆடைகளோடு துள்ளிக் குதித்து ஓடியபோது ஸ்டான்லி பேய் சிரிப்பு சிரித்தான்.

மறு நாள் அலுவலக விசாரணை நடைபெற்றது. மு தான் மு அல்ல என்றும் ஸ்டான்லிதான் என்றும் தொடர்ந்து வலியுறுத்தினான். ‘அந்நியன்’ படத்தை விசாரணை அதிகாரிகள் பார்த்திருந்தது மு வுக்கு வசதியாகப் போயிற்று. ஸ்டான்லியின் அமெரிக்க ஆங்கிலத்தை மிகவும் மெச்சி, அவனுடைய அறச்சீற்றத்தைப் பாராட்டி, அதே சமயத்தில் இப்பொழுது வேலைக்கு ஆட்கள் கிடைப்பது எவ்வளவு துர்லபமாயிருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு டேபிள் டென்னிஸ் அறையில் நடப்பதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

மு பட்டாக்கத்தியை தூக்கிக்கொண்டு ஓடிய விவகாரத்தை விசாரணை நடத்திய உயரதிகாரிகளில் ஒருவரான மார்க்கபந்துவை நீங்கள் பல இடங்களில் சந்தித்திருக்கலாம். பாரோபகாரி. பெரு நகரங்களிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் வரவில்லையென்றால் கார்ப்பரேஷனை தொடர்பு கொள்ளுவது, மின்சாரவாரியக்காரர்களை சரிக்கட்டுவது, பண்டிகை நாட்களில் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது, பெண்களை ஒருங்கிணைத்து திருவிளக்கு பூஜைகள் நடத்துவது, என்ற காரியங்களையெல்லாம் பலர் செய்வார்களே, அந்த மாதிரி ஒரு நபர். கூடுதல் என்னவென்றால் மார்க்கபந்து ஒரு இலக்கிய பங்காருவும் கூட. நிறைய எழுத்தாளர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்தது. எழுத்தாளர்கள் சென்னை வரும்போதெல்லாம் லாட்ஜ் அமர்த்துவார். பட்டிகாட்டான் போல உடை அணிந்திருக்கும் எழுத்தாளர்களுக்கு ஷாம்பூவும் ஜீன்ஸும் வாங்கித்தந்து குஷிப்படுத்துவார். நூல் வெளியீட்டு விழாக்களில் உணர்ச்சிவசப்பட்டு கையெழுத்து கேட்பார். அறியப்படாத சமணப்படுகைகளுக்கு செல்லவிருக்கும் வாசகர்களுக்கு பஸ் பிடித்துத்தருவார். இலக்கியம் தெரியாத ஆட்கள் அவரிடம் சிக்கிவிட்டால் தனக்கும் பிரபலங்களுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றி பேசி விளாசித் தள்ளிவிடுவார். மார்க்கபந்துக்கு மு வை விளங்கிக்கொள்ள இயலவில்லை. மு வைத் தாக்கியிருந்த மைய நரம்பு முறிவு எந்த தமிழ் சினிமாவிலும் வந்திராதது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது, அதனால் அவன் நோயின் தன்மை அவருக்கு புரியவும் இல்லை.

‘Unknown quantity’, ‘Unknown quantity’ என்று மு வைப் பற்றி மார்க்கபந்து அடிக்கடி தனக்குள் முனகிக்கொண்டார். மு நாளொன்றுக்கு 120 பக்கங்கள் வரை ஏதாவது தட்டச்சு செய்து வேறு அவரை அசத்திக்கொண்டிருந்தான். நரம்பு முறிவினால் இவ்வளவு எழுதமுடியுமா என்று மார்க்கபந்துக்கு ஆரம்பத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் கொஞ்சம் கொஞ்சமாக மு வின் அடிமையாக மார்க்கபந்துவை மாற்றிவிட்டிருந்தது. மு வின் நோய்க்கூறினை அறிந்துகொள்ள  ‘Rain man’, ‘One who flew over cuckoo’s nest’, ‘Bat Man’, ‘Witches of the Eastwick’ போன்ற படங்களைப் பார்த்துத்தள்ளினார். மு தனக்கு ஹாலிவுட் நடிகர் ஜேக் நிக்கல்சனை மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தது வேறு அவரை பாதித்தது. அலுவலக ஆயுத பூஜைக்கு பெரிய டேப் ரிகார்டரில் ஹரிகிரி நந்தினி பாடலைப் போட்டுக்கொண்டு ஜேக் நிக்கல்சன் சார் Batman படத்தில் மியூசியத்தில் நுழைவது போல உள்ளே நுழையவேண்டும் என்று ஆலோசனை சொல்லி மார்க்கபந்து எல்லோரையும் சிரிக்க வைத்தார். அவருக்கு இப்படி ஒரு நகைச்சுவை உணர்வு இருப்பதை மற்றவர்கள் இப்படியே தெரிந்துகொண்டனர்.

பத்து புத்தகத்தைப் படித்தால் பதினோராவது புத்தகத்தை மு உடனடியாக தட்டச்சு செய்துவிடுவான். முருகன் துதிப்பாடல்களை மார்க்கபந்து மு வுக்குக் கொடுக்க மு ஒவ்வொரு பாடலைப் பற்றியும் தத்துவ விசாரம் ஒன்றை அவருக்கு எழுதிக் கொடுத்து விடுவான். அதை அப்படியே மார்க்கபந்து அருணகிரிநாதர் சபை, திருப்புகழ் முற்றோதுதல் குழு போன்ற இடங்களில்  பேசி புகழ் பெற ஆரம்பித்தார். லண்டன் முருகன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் பாடிய ‘ஓ லண்டன் முருகா!’ என்ற கீர்த்தனத்திற்கு மு எழுதிய தத்துவ விசாரத்தை மார்க்கபந்து ஜேக் நிக்கல்சன் சார் Witches of the Eastwick படத்தில் காதல் என்றால் என்ன என்று ஷெர் மேடத்துக்கு விளக்குவாரே அதே பாணியில் விளக்குவது வெளிநாடு வாழ் தமிழர்களிடையே மிகவும் பிரசித்தி. மார்க்கபந்து குமர தத்துவத்தை விளக்கும் முவின் உரையை பெங்களூரு ரமணி அம்மாவின்  ‘குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் ‘ பாடலைப் பாடி கூடவே ஆடி முடிப்பது வழக்கம்.

இந்தப் பின் நவீன நிகழ்வு மேலும் மேலும் பிரசித்தி பெறவே பொறாமையும் எல்லாத் தரப்பிலும் வலுத்திருக்கிறது. முவும் மார்க்கபந்துவும் பிபிஓ வேலையை விட்டு விட்டு இப்போது முழு நேர முருகன் நிகழ்ச்சி நடத்துபவர்களாகிவிட்டனர். தான் படிக்கும் புத்தகங்களுக்கு நேர்மையாக இருக்கும் மு முருக பக்தனாகிவிட்டான்.

சிக்கல் இதன் பிறகு புதிதாகிவிட்டது. மு - மார்க்கபந்து கூட்டணி ஓமுருகா நிகழ்ச்சியை பொறாமைக் கும்பல் ஒன்று பிராமணரல்லாரின் இந்து தமிழ் தேசீய நிகழ்வு என்று வருணித்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியை பிராமணர்களையும் உள்ளடக்கிய இந்து தமிழ் தேசீய நிகழ்வாய் மாற்ற வேண்டுமாம். என்ன யோசனை சொல்வீர்கள் நீங்கள் என்றான் மு.

அசந்து போய் உட்கார்ந்திருந்தேன். நான் தமிழ் சினிமா பார்ப்பதில்லையே என்றேன் ஈனஸ்வரத்தில்.

மார்க்கபந்துவிடமிருந்து முவிற்கு கைபேசி அழைப்பு வந்தது. மார்க்கபந்து நாம் தேடிக்கொண்டிருந்த படம் கிடைத்துவிட்டது என்று கூவினார். மு அவசரமாகக் கிளம்பினான்.

என்ன படம் என்றேன் ஆர்வமாக.

நான் கடவுள்.

4 comments:

ஜமாலன் said...

அருமையாக உள்ளது. )))

mdmuthukumaraswamy said...

நன்றி ஜமாலன்:)

Unknown said...

நல்ல நக்கல்.. பின்றீங்க...

sinthikkama siringa said...

Nakkalum naiyandium ungal udanpirappa? New style and different presentation.Congrats.

"Ragam" Ramesh Kumar.