ஸ்டெஃபி என்னுடைய சமீபத்திய கவிதைத் தொகுப்பான “பாதம் பற்றிய பூ” தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகளை செர்பிய மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். என்னுடைய ஆங்கிலக் கவிதையை போலந்திலிருந்து வந்திருந்த மல்கோஷியா போலிஷ் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்.
அன்றில் என்பதை black ibis என்றும் மகன்றில் என்பதை love bird என்றும் மொழிபெயர்த்திருப்பதாக ஸ்டெஃபி தெரிவித்தார். ‘நீல கண்டம்’ என்பதற்கு வெளிப்படையாகவும் உள்ளார்ந்தும் இருக்ககூடிய mythological significance பற்றி நான் ஸ்டெஃபிக்கு விரிவாக எடுத்துச் சொன்னேன்.
மூன்று கவிதைகளும் கீழே:
—-
அன்றில்கள் நடுவே ஒரு மகன்றில்
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
சிறகு கோதும்
ஒளியின் பறவை ஒன்று
உன் பளிங்கு உடலிலிருந்து
பறந்து வெளியேறியபோது
அதை அன்றில் பறவை என்றே
நினைத்தேன்
கடுங்கோடையில் பனைமரங்கள்
தங்கள் பழங்களை உதிர்த்துவிட்ட
வறண்ட பாளையில் அது கூடமைத்து
வாழ்வதாகவே கற்பனை செய்தேன்
நினைவின் கடலின்
நீர் மேற்பரப்பின் வெகு அருகாமையில்
அன்றில் பறவைகளின் கூட்டம்
திவலைகளினூடே கலவியின்
களிக்கூச்சல் எழுப்பி சிறகுகளை படபடக்கையில்
அதில் ஒன்று மகன்றில் என
நீயோ நீயோ என மருகினேன்
கடற்கரையில் யாரோ உருட்டி
வந்திருந்த பனங்குறும்பை
கருங்கல்லெனக் காய்ந்து கிடந்தது.
அதை எடுத்து நான் அன்றில்கள்
நடுவிலான ஒற்றை மகன்றிலின் மேல்
எறிந்தேன்
நீயா நீயா என அரற்றி கண்கள் சிவந்து
சிறகுகள் ஒடுக்கி தலை கவிழ்ந்து
நீர்த்திவலைகளில் இரத்தம் விசிறி
மரித்துப் போனது மகன்றில்
இரத்தத்தாலும் அந்தியாலும் செந்நிறத்தில் தோய்ந்த
பெரும் நீர்த்திவலைகளின் விசிறி
வானையும் கடலையும் நிறைக்க
பேராவேசம் கொண்ட அன்றில்கள்
என்னைக் குத்திக் கிழிக்க கூச்சலிட்டு
வருகையில்
கடற்கரையின் பனைமரம் மின்னல் தாக்கித்
தீப்பற்றி எரிந்தது
அன்றில்களும் மகன்றில்களும் இவ்வாறாகவே
இவ்வுலகில் இருந்து மரபற்று அழிந்து போயின
—
நீல கண்ட அறிக்கை
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
பனங்காடையை
நீலகண்டப்பறவையாக
நீங்கள் அறிந்திருக்கக்கூடும்
பெரிய தலை,
கருஞ்சாந்து நிறத்தில் அலகு,
செம்பழுப்பும் நீலமும் கலந்த மார்பு,
வெளிர் நீல வால்பகுதி எனப்
பேரெழிலுடன் இருக்கும்
அது உங்களையும் என்னையும் போல
ஒரு வெட்டவெளிப் பறவை
சிறு பூச்சிகளை ஈவு இரக்கமில்லாமல்
வேட்டையாடும்
அலகில் பிடித்த பூச்சியைப் பனங்காடை
தூக்கி தூக்கிப் போட்டுப் பிடித்து
துன்புறுத்தி, விளையாடி, கொடூரமாய்க்
கொன்று தின்பதைப் பார்ப்பது
தெய்வாம்சம் கூடிய சௌந்தர்யத்தை தரிசிப்பது
நீலகண்டப் பறவையைத் தேடி நீங்கள்
அபூர்வத்தைத் தேடிச் செல்வது போல
எங்கும் போக வேண்டாம்
அது வெகு சாதாரணமாய் உங்கள்
வீட்டு தொலைபேசிக் கம்பியிலும்
உங்கள் இயல்பிலும் அமர்ந்திருக்கும்
அது காதலுக்காக என்ன வித்தை
வேண்டுமென்றாலும் செய்யும்
இறகுகள் மடக்கி சுழன்று சுழன்று
கீழே விழுந்து தரையைத் தொடுகையில்
விருட்டென்று மேலெழும்பிப் பறக்கும்
பரிவுணர்வில் மடங்கிய இணையைப்
புணர்ந்த பின் துச்சமாய் மறந்துவிடும்
அதன் இறகுகளால் ஆன ஆயத்த உடைகளை
சீமாட்டிகள் விரும்பி அணிவதால்
பனங்காடைகளும் அவை எப்படிப் பூச்சிகளை
வேட்டையாடுமோ அவ்வாறே வேட்டையாடப்பட்டு
அவை உயிருடன் இருக்கும்போதோ
அவை உயிரற்ற கறியாய் கிடக்கும்போதோ
அவற்றின் இறகுகள் ஒன்று ஒன்றாய்ப்
பிடுங்கப்பட்டு சேகரிக்கப்படுகின்றன.
நீலகண்டப் பறவை
அழகோ அழகு
——
நானொரு மஞ்சள்மூக்குக் குருவி
—-
எம்.டி.முத்துக்குமாரசாமி
—-
உனக்குத் தெரியுமா நான் செம்பருத்தி
மொக்கவிழ்ப்பதில் நம்பிக்கை
வைத்திருக்கிறேன் என்று?
நான் அதற்காக ஒரு மஞ்சள்மூக்கு
குருவி போல இலைகளூடே
ஒளிந்து காத்திருக்கிறேன்
இதழ் விரியும் தருணம்
தேன் பருகுவதற்காக அல்ல
என் மஞ்சள்மூக்கும் செம்பருத்தியின்
இளம் சிவப்பும் சேர்ந்து அங்கே ஒரு
சூரியோதயத்தை நிகழ்த்திக்காட்டும்
என்பதற்காக
அத் தருணத்தின் முன்னும்
பின்னும் நான் பார்ப்பதில்லை
இணைவின் கணம் தவிர
இயற்கைக்கு வேறென்ன தெரியும்?
இலைகளோடு இலைகளாக நான்
இருந்தாலும் என் மஞ்சள்மூக்கு
என்னைத் தனியே காட்டிக்கொடுத்துவிடுகிறது
—
என் ஆங்கிலக் கவிதை ஒன்றின்
மல்கோஷியாவின் போலிஷ் மொழி பெயர்ப்பு:
knots of pleasure : Węzły przyjemności
Palce masują
znikają węzły
ze zjaw uchodzi powietrze
Rozwija się kobra
skóra wyśpiewuje pieśń jedwabną
uwiedziona dźwiękiem fletu z oddali
Mokry jedwab przywiera do skóry
imbiru ogień podziemny
odbija się delikatnym echem
Czy przyjemność
to pytanie Epikura,
ostateczna odpowiedź dana przez życie?
Ciało, wehikuł czasu
tańczy na krawędzi pragnienia
w wiecznym rzeki nurcie
No comments:
Post a Comment