Thursday, September 1, 2011

ராம் லீலா மைதானத்தில் கேட்ட வாய்மொழிக் கதை

கைபேசி காதோடு ஒட்டிப்பிறந்தவளுக்கு மடியோடு தைத்த கணிணியோடு மாப்பிள்ளை பார்த்தார்கள். மடி கணிணி மாப்பிள்ளை இணைய இடுகை இடுவதில் வல்லவனே தவிர மற்றபடிக்கு சங்கதி வேலை செய்யாதாம். காதோடு கைபேசிகாரிக்கு மடி கணிணி மாப்பிள்ளை உணர்ச்சிவசப்பட்டு அன்னா ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு கொடுப்பதற்காக ராம் லீலா மைதானத்திற்கு போனது கொஞ்சமும் பிடிக்கவில்லையாம். நல்ல வேளை மாப்பிள்ளை உண்ணாவிரதம் இருக்கவில்லையாம். ராம் லீலா மைதானத்தில் மடி கணிணியோடு உட்கார்ந்து இடுகை மேல் இடுகை இட்டதோடு சரி. பதிமூன்று நாளில் அறுபது இடுகைகளாம். புத்தகமே போடலாமாம். காதோடு கைபேசிகாரி தொடர்ந்து மாப்பிள்ளையோடு தன் தோழிகளோடு பேசுவது போலவே காலை என்ன மதியம் என்ன இரவு என்ன சாப்பாடு என்று கேட்டுக்கொண்டே இருந்தாளாம். லாரி லாரியாய் கச்சோரியாம், சமுசாவாம், சாட்டாம், பூரியாம், கிழங்காம், ரொட்டியாம். மாப்பிள்ளை சாப்பிட்டுகிட்டே இருக்கானாம். சாப்பிட்ட சாப்பாட்டில் வயிறு ஊதிகிட்டே இருக்காம். மடி கணிணியை நெஞ்சில் வைத்துதான் ஏழாவது நாளிலிருந்து இடுகையே எழுதமுடிந்ததாம். வயிறு ஊதும் போதுதான் அந்தக் கையில்லா சட்டைகாரியோடு சண்டை வந்து விட்டதாம். கையில்லா சட்டைக்காரி எங்கேயிருந்து வருகிறது லாரி லாரியாய் கச்சோரி, டாங்க், டாங்காய் மினரல் வாட்டர் என்று டிவிட்டியே கண்டுபிடித்து விட்டாளாம். ராம் லீலா மைதானக் கூட்டம் எகிப்து போலவே, லிபியா போலவே சமூக ஊடக பரிசோதனை சதியாம். கேட்டவுடன் மாப்பிள்ளை பொங்கிட்டானாம். கையில்லா சட்டைக்காரிகளே நாட்டைத் துண்டாட வந்த ஐந்தாம்படை என்று விட்டானாம் பாருங்கள் இடுகை ரத்தக் கொதிப்பு அளவுக்கு அதிகமானதாலும் வாயில் கச்சோரியை வைத்துக்கொண்டே ' பாரத மாதாக்கு ஜே!' என்று கூவியதாலும் மூச்சடைப்பே வந்துவிட்டதாம். அப்போதுதான் ' அழகிய அசடே' என்று காதோடு கைபேசிகாரியைக் கொஞ்சி தன் சங்கதி ரகசியத்தை உளறிவிட்டானாம். காதோடு கைபேசிகாரி அத்தோடு மாப்பிள்ளையை விட்டவள்தானாம். இந்திய பாராளுமன்றத்தை விட பெப்பே கொடுப்பதில் கெட்டிக்காரிகள் இந்த காதோடு கைபேசிகாரிகள் என்று புலம்பித்திரிகிறானாம் மாப்பிள்ளை. இனிமேல் ஜென்மத்துக்கும் சம கால வரலாற்றுத் தருணங்களைப் பற்றி இடுகையே இட மாட்டானாம். வரலாற்றுத் தருணங்களை கோட்டை விடுவதை மையமாக வைத்து ஒரு பைங்கிளி நாவலை எப்படி இணையத்தில் எழுதுவது என்று கையில்லா சட்டைக்காரியிடம்  யோசனை கேட்டிருக்கிறானாம்.

3 comments:

Balaji Srinivasan said...

true story .................. :D

ஜமாலன் said...

”சமூக ஊடக பரிசோதனை சதி” இது நன்றாக உள்ளது. ))

நீண்டநாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்துக்களை படிப்பது ரசமாக உள்ளது. புதுமைபித்தனின் நையாண்டி அருமையாக வெளிப்படுகிறது. ))

Anonymous said...

Ayya muthu kumara, nalla irrukuiya unga naiyandi. continue pannuiya.

Ragam Ramesh Kumar,
171 tenth cross,
Ponnagar colony,
Trichy- 620001

cell: 9677558069.

email id is bhuvaneswarima@yahoo.com