Thursday, August 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி சேவலிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  மதுரைக் கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 107

திணை;  மருதம்

——

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்

யாண ரூரன் றன்னோடு வதிந்த

ஏம வின்றுயி லெடுப்பி யோயே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒள்ளிய பூவைப் போன்ற செக்கச் சிவந்த கொண்டையையுடைய கோழிக்கூட்டங்களை வலிந்து கொண்ட சேவலே, ஆழமான நீரினால் உண்டாகும், புது வருவாயை உடைய ஊரை உடையவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துலினின்றும் எம்மை எழுப்பிய நீ செறிந்த இருளையுடைய இடையிரவின்கண் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப்பூனையின் குட்டிக்குப் பல நாள் இட்டுவைத்து உணவாகி நீ மிக்க துன்பத்தை அடைவாயாக. 

—-

காமமிக்க கழிபடர் கிளவி

——

தலைவன் பொருள் ஈட்டி மீண்டவனாக அவனை நெடுநாட்களாகப் பிரிந்த துயர் தீரக் கூடியிருக்க எண்ணிய தலைவிவிக்கு ஓரிரவு மனநிறைவை உண்டாக்கவில்லை. காலை விரைவில் புலர்ந்தது கண்டு அவள் துயருற்றாள். காம மயக்கத்தினால் புலர்ந்தது என்று உணர்த்திய சேவலை கடுவன் பூனை கொல்லட்டும் என சபித்தாள். காம மிகுதியில் தலைவி சேவலிடம் கூறியதாக இப்பாடல் இருக்கிறபடியால் இப்பாடல் காமமிக்க களிபடர் கிளவி என அழைக்கப்படுகிறது. 

—-

படீஇயரோ நீயே

—-

காட்டுப்ப்பூனைக் குட்டிக்கு வீட்டில் கிடைக்கும் எலியே போதுமானது. அதற்கு சேவலே கிடைத்தல் பலநால் கவலையின்றி உண்ண இயலும். சேவல் கோழிக் கூட்டத்தையே வைத்திருக்கும் இயல்புடையது, தலைவனின் இயல்பும் இவ்வாறு இருத்த்ற்கூடும் என்பதும் தலைவி குறிப்பினால் உணர்த்துகிறாள். அதிக நேரம் தலைவனோடு கூடப்பெறும் இன்பத்தை கெடுத்தமையால் சேவலை பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்கிறாள். சேவலைக் கொன்று இரையாக்குவேன் என்று தலைவி கூறுவதாகவும் கொள்ளலாம். ‘யாமத்துப் படீஇயர்’ என்றது அது தன் உறவை யாமத்தில் பிரித்ததாகவும் பொருள்தரும். ‘படீஇயரோ நீயே’ என்றது சேவலை நேரடியாகக் குற்றஞ்சுமத்துதலாகும். ‘கடு நவைப் படீஇயர்’ என்றது கூடிய தண்டனை பெறுக எனவும் பொருள்படும்.  படீஇயர் – படுவாயாக , சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி,  இகழ்ச்சிப்பொருளில் வந்தது. 

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

—-

தலைவி கடுவன் பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்று சொல்லும் சேவலின் விவரிப்பு இந்தப் பாடலில் அழகானது. குவி இணர் – குவிந்த  பூங்கொத்து, வினைத்தொகை,  தோன்றி – செங்காந்தள் , ஒண் பூ –  ஒளிர்கின்ற பூ , அன்ன – போன்ற , செந்நெற்றி –  கொண்டை, -நெற்றி – சேவலின் கொண்டைக்கு ஆகுபெயர் - கணங்கொள் சேவல் – கூட்டத்தில் இருக்கிற சேவல். குவிந்த செங்காந்தள் போன்ற கொண்டையையுடைய கோழிக்கூட்டத்தின் நடுவில் இருக்கிற சேவல். 


துயிலெழுப்பிய சேவலே நீ கடுவனுக்கு இரையாவாயாக, பொழுது புலர்ந்தமையால் நாம் துன்புறுவேனானேன் எனத் தலைவி கூறுகிறாள். 

—-



Monday, August 26, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-106

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-106

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: கபிலர்

குறுந்தொகையில் பாடல் எண்; 106

திணை; குறிஞ்சியுள் மருதம்

——

புல்வீ ழிற்றிக் கல்லிவர் வெள்வேர்

வரையிழி யருவிற் றோன்று நாடன்

தீதி னெஞ்சத்துக் கிளவி நம்வயின்

வந்தன்று வாழி தோழி நாமும்

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு 

தான்மணந் தனையமென விடுகந் தூதே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, புல்லிய விழுதையுடைய இற்றிமரத்தினது மலையிலுள்ள கற்களிற்படர்கின்ற வெள்ளிய வேர், மலைப்பக்கத்தில் வீழ்கின்ற அருவியைப் போலத் தோன்றும், நாட்டையுடைய தலைவன், குற்றமற்ற நெஞ்சினால் நினைந்து கூறிய சொற்களை உரைக்கும் தூது நம்மிடத்து வந்தது; நாமும் நெய்யைப் பெய்த தீயைப் போல அத்தூதை ஏற்றுக்கொண்டு அவன் எம்மை மணந்தகாலத்தில் இருந்த அன்புடைய நிலையினேம் என்று கூறி தூதுவிடுவேம்.

——

புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்

——

இற்றியின் விழுதுகள் மலையில் படர்ந்து அருவி போலத் தோன்றும்; ஒன்று மற்றொன்றாகத் தோன்றுதல் தலைவனும் தம்மால் உள்ளவாறு அறியப்படாமல் மாறித் தோன்றுவான் என்ற தலைவியின் குறிப்பினை உணர்த்தும். இரா. இராகவையங்கார்  ‘புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர்’ என்றதனால் இற்றிமரம் கல்லினின்று வெளியே வளர்ந்து கோடுகள் புறப்பட நீடினும் தனக்கு இடனாகிய கல்லினை விடாது வீழினால் பற்றிக் கோடற்கு இவர்தல் போலத் தலைவன் இல்லினின்று வெளியே சென்று ஒழுகினும் தனக்கு இடனாகிய மனையை விடாது தூது மொழியினால் பற்றிக் கொள்கின்றான் எனக் குறித்தாளாம் என்று விளக்கம் எழுதுகிறார். 

—-

நெய்பெய் தீயி னெதிர்கொண்டு

——

பரத்தையினாற் பிரிந்த தலைவன், தீதில் நெஞ்சத்துக்கிளவியென்றது தலைவன் நெஞ்சாற் பிழை செய்தவன் அல்லன் என்று தலைவி  தூதின் மூலம் உணர்ந்ததைப் புலப்படுத்தியது. இந்தச் சூழலை ‘தூது கண்டு தலைவி கூறியது என தொல்காப்பியம் கற்பியல் சூத்திரம் 6 இக்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் குறிப்பிடுக்கிறார். தீயில் நெய் பெய்யப்பட்டபோது அத்தீயானது மேல் நோக்கி எழுந்து நெய்யை ஏற்றுக்கொண்டு தான் அவியாது நிற்றல் போல நாமும் தலைவனின் தூதுமொழிகளை ஏற்று மனம் தளராமல் ஆறுதல் அடைவோம் எனத் தலைவி குறித்தனள். இவ்வாறாக கொடுப்பக் கோடல் கற்பென அழைக்கப்படுகிறது. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற பேராசிரியர் “களவினுள் நெய்பெய் தீயின் எதிர்கொள்ளலாகாமையின் தூது முனிவின்மை, கற்பிற்கு உரியது”  என்று  எழுதுகிறார். 

——

தான்மணந் தனையமென விடுகந் தூதே

——-

தலைவன் மணந்த காலத்தில் நிறைந்த அன்போடிருந்தாவாறே இப்போதும் குறைவின்றி இருப்பேன் என்றமையால் அவனை ஏற்றுக்கொள்வதற்கான குறிப்பு பெறப்பட்டது. தலைவி தன் காதலனை தீ முன்னர் கைப்பற்றிய நிகழச்சியை நினைவு கூர்கிறாள். 


தோழி,  நாடன் தூதில் அவனது நெஞ்சத்து சொல் வந்தது, நாமும் எதிர்கொண்டு தூது விடுவோம், அவனை ஏற்றுக்கொள்வோமாக எனத் தலைவி கூறுகிறாள். 

—-



Friday, August 23, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-105

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: நக்கீரர்

குறுந்தொகையில் பாடல் எண்; 105

திணை; குறிஞ்சி

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினைக்

கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்

அறியா துண்ட மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்

சூர்மலை நாடன் கேண்மை

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, குறவனுக்குரிய தோட்டத்தில் விளைந்த பொன்னைப் போன்ற சிறு தினையில் புதியதை உண்ணும் தெய்வத்துக்குப் பலியாக இட்ட வளவிய கதிரை தெரியாமல் உண்ட மயில், தேவராட்டி வெறியாடுகின்ற அழகைப் போல வெம்மையுற்று நடுங்கும் இடமாகிய தெய்வங்கள் உறையும் மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, நீர் மிக்க கண்களோடு நாம் நினைந்து துன்புறுதற்குக் காரணமாகியது. 

——

புனவன் றுடவைப் பொன்போற் சிறுதினை

—-

தொல்காப்பியம் களவியல் சூத்திரம் 21 இக்கு உரை எழுதுகிற இளம்பூரணர் இப்பாடலில் வருவது போன்ற பேசும் சூழலை திருமணத்தைத் தள்ளி வைத்த காலத்து வருத்திய தலைவி தானே கூறியது என வரையறுக்கிறார். புனவன் - புனத்தையுடைய குறவன், தினையை விதைத்து விளைவித்து அதில் வரும் முதற்கதிரை தெய்வத்துக்குப் படைத்தல் மரபு. 

—-

ஆடுமகள்

—-

ஆடுமகள் - வெறியாடுபவள், காணிக்காரிகை, தேவராட்டி, அரங்கின் கண் கூத்தாடுகின்ற விறலி, தெய்வமேறி ஆடுபவள்  எனவும் அறியப்படுவாள் . தெய்வத்திற்கு படைக்கப்பட்டது என்று அறியாமல் கதிரின் செழுமை கண்டு உண்ட மயில் வெறியாடுகிறவளைப் போல உள்ளம் வெந்து உடல் நடுங்கும் எனத் தலைவி கூறுகிறாள்.  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன்  புனவன் சிறுதினைக் குரலை அறியாது உண்ட மஞ்ஞை வெய்துற்று நடுங்கினாற்போல, தமர் காவலில் உள்ள என்னை அவர்கள் அறியாதவாறு, தகாத களவினால் திளைத்த தலைமகன் தமரை வரையக் கேட்டிலனாய் அஞ்சி நடுங்குகின்றான் என்பதாம் என்பது உள்ளுரை என விளக்கம் அளிக்கிறார். தலைவியின் உணர்ச்சி ‘ மறைபொருள் ஊரார்க்கு அரிதென்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து’ என்ற திருக்குறளாலும்  (1180)  விளங்கும். 

——

நீர்மலி கண்ணோடு நினைப்பா கின்றே

—— 

தலைவனின் களவு நீடித்த செயல் தலைவியின் நீர் மலிந்த கண்ணீருக்கும் ஊரார் அறிந்து அலர் பேசுவதற்கும் ஏதுவயிற்று. இதில்’ நீர்மலி கண்ணோடு நினைப்பாகுதல்’ துயரின் வெகு அழகான விவரிப்பு.  ‘கடியுண் கடவுட் கிட்ட செழுங்குரல்’ என்ற அடியில் வரும் கடி எனும் சொல் குறித்து தொல்காப்பியம் உயிரியல் 87 ஆவது சூத்திரம், ‘கடி என் கிளவி வரைவே கூர்மை காப்பே புதுமை விரைவே விளக்கம் மிகுதி சிறப்பே அச்சம் முன்தேற்று ஆயீர் ஐந்தும் மெய்ப்படத் தோன்றும் பொருட்டு ஆகும்மே’ என்று கூறுகிறது.

——

மஞ்ஞை யாடுமகள் வெய்துற்று நடுங்குதல்

——

தலைவி தன்னுடைய உள்ளார்ந்த நடுங்குதலை, ‘மஞ்ஞை யாடுமகள் 

வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும்’ எனக் குறிப்பிடுவது கவனத்திற்குரியது. மயில் நடுங்கிற்று. தலைவியும் நீர்மலி கண்ணோடு அவன் திருமணத்தை நீட்டித்தவிடத்து நடுங்கினாள். கண்ணும் மனமும் கவரும் அவன் வளமை கண்டு நட்பு (கேண்மை) செய்ததால் வந்த துன்பம் இது என தலைவி கலங்குகிறாள். குறுந்தொகை 52 ஆவது பாடலில் ‘ இது போலவெ நடுகுதல் குறித்து “ சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே’ என்றொரு வரி வருகிறது. குறிஞ்சிப்பாட்டு ‘ சூர் உறு மஞ்ஞையின் நடுங்க’ என்று இதைக் குறிப்பிடுகிறது, 


தலைவனுடைய கேண்மை கண்ணீர் மல்கச் செய்யும் துன்பத்தைத் தந்து நினைவளவிலேயே நிற்கிறதே தவிர இன்பத்தைத் தந்து திருமணத்தில் நிறைவடையவில்லை என்பது தலைவியின் உட்கோள். 

——

Wednesday, August 21, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-104

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: காவன்முல்லைப் பூதனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 104

திணை; பாலை

——

அம்ம வாழி தோழி காதலர்

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

பிரியு நாளும் பலவா குவவே

—-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, ஒன்று கூறுவேன் கேட்பாயாக; நம் காதலர் நூலற்ற முத்து வடத்தினின்றும் தனித்து உதிர்கின்ற முத்துக்களைப் போல குளிர்ந்த பனித்துளிகள் துளிக்க, குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற்காலையில் பசுக்கள் மேயும், பனி வீழ்கின்ற காலத்திலே, என்னைத் தலைவர் பிரிந்து சென்றார்; அங்ஙனம் பிரிந்து சென்று உறையும் நாட்களும் பலவாகின்றன; நான் எங்ஙனம் ஆற்றுவேன்!

——

அம்ம வாழி தோழி

—-

தோழியை அம்ம என்று அழைத்து வாழ்த்து சொல்லுதல் குறுந்தொகைப் பாடல் 77 இலும் இருக்கிறது. அம்ம – அம்ம கேட்பிக்கும் என தொல்காப்பியம், இடையியல் வாய்பாடு  28 கூறுகிறது.  வாழி- அசைச் சொல்.  வாழி என்பதற்கு  பொ. வே. சோமசுந்தரனார் இந்த உரையசை, நீ வாழ்வாயாக, நீ வாழ்வாயாக என வாழ்த்து முகத்தானே யான் வாழ்கல்லேன் எனக் குறித்தாள் எனினுமாம் என்று விளக்கமளிக்கிறார்.  

—-

நூலறு முத்திற் றண்சித ருறைப்பத்

தாளித் தண்பவர் நாளா மேயும்

பனிபடு நாளே பிரிந்தனர்

———

பனித்துளி ஒன்றோடொன்று தொடர்பின்றி விழுமாதலால் நூலறுந்த முத்தை அதற்கு உவமை கூறினாள். தாளி என்பது ஒருவகைக் கொடியுமாகும். நாட்காலையில் பசு மேயும்போது அறுகின் நுனியிலுள்ள பனித்துளிகள் துளிக்கும். பனிபடு நாளே பிரிந்தனரென்பது பிரிதற்குரிய காலம் என்ற கருத்தை உடையது. 

 நூல் அறுந்த முத்து வடம் பல சங்கப்படல்களில் காணப்படும் உவமையாகும்.  அகநானூறு 225 – ‘துளை முத்தின் செந்நிலத்து உதிர’, அகநானூறு 289 – ‘நெகிழ் நூல் முத்தின்’, குறுந்தொகை 51 – ‘நூல் அறு முத்தின்’, குறுந்தொகை 104 – நூல் அறு முத்தின், கலித்தொகை 82 – ‘கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ’ ஆகியன இணைத்து வாசிக்கத் தக்கன. 


நூல் அறு முத்தின் – – இன் உருபு ஒப்புப் பொருளது. 


திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் தாளியின் கொடியை ஆ மேயும் பனிக்காலம் என்றதனானே, விலங்கும் வேண்டும் நுகர்ச்சியை எளிதிற்பெற, யான் மட்டும் வேண்டும் நுகர்ச்சியைப் பெற்றிலேன் எனவே இது இறைச்சி எனக் குறிக்கிறார். 

—-

பிரியு நாளும் பலவா குவவே

—-

தலைவர் பிரிந்த நாள் உண்மையிலேயே சிலவாயினும் அவை தலைவிக்குப் பலதாகத் தெரிகிறது. நெடுநல்வாடை என்றப் பெயர்க் காரணம் கூறவந்த நச்சினார்க்கினியர் ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந் தலைவிக்கு ஒரு பொழுது ஓரூழி போல நெடிதாகிய வாடையாய்த்’ தெரிவதாக உரை எழுதுவதை இதோடு சேர்த்து வாசிக்கும்படி உ.வே.சா. அறிவுறுத்துகிறார். 


என்னோடு உடனிருந்தற்குரிய பருவத்திற் பிரிந்தனர்; அது துன்பத்திற்குக் காரணமாயிற்று. . அங்ஙனம் பிரிந்தவர் சில நாட்களில் மீண்டு வந்திருப்பின் அத்துன்பத்தை ஆற்றியிருப்பேன். அவ்வாறின்றிப் பல நாட்களாகவும் இன்னும் வந்திலர். யான் என்ன செய்வேன் என்று தலைவி கூறி இரங்கினாள். 

——


Sunday, August 18, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-103

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-103

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்: வாயிலான் தேவனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 103

திணை; நெய்தல்

——

கடும்புன  றொகுத்த நடுங்ஞ ரள்ளற் 

கவிரித  ழன்ன தூவிச் செவ்வாய்

இரை தேர் நாரைக் கெவ்வ மாகத்

தூ உந் துவலைத் துயர்கூர் வாடையும்,

வாரார் போல்வர்நங் காதலர்

வாழேன் போல்வ றோழி, யானே

———-

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

தோழி, மிக்க புனலால் தொகுக்கப்பட்ட, நடுங்குவதற்கு ஏதுவாகிய துன்பத்தைத் தரும் சேற்றில் மீன் உணவைத் தேர்கின்ற, முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும், செம்மையான அலகையும் உடைய நாரைக்குத் துன்பம் உண்டாகும்படி தூவுகின்ற நீர்த்துளிகளையுடைய, பிரிந்தார் துயர்கூர்தற்குக் காரணமாகிய வாடைக்காற்றையுடைய, கூதிர்காலத்திலும் பிரிந்து சென்ற தலைவர் வருவாரல்லர் நான் வாழ்வேனல்லன்.

—-

தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்,

வாரார் போல்வர்நங் காதலர்

———-

வாடையும்- உம்மை இழிவுச் சிறப்பு. போல்வர் , போல்வல்: உரையசைகள்.  ஒப்பில் போலியும் அப்பொருட்டாகும் என்று தொல்காப்பியம், இடையியல் 29 ஆவது வாய்பாடு கூறுவதை கவனிக்க. 

நம் காதலரென்றாள், தனக்கும் தோழிக்குமுள்ள ஒற்றுமை பற்றி.  

கூதிர் பருவம் வந்ததைக் கண்டு நிலையழிந்த தலைவி தலைவன் வாராதிருப்பதால் தான் வாழேன் என்று தோழியிடம் இப்பாடலில் கூறுகிறாள். 

——-

கடும்புன  றொகுத்த நடுங்ஞ ரள்ளற்

——

தன்பாற் சென்றோரை ஆழ்த்திவிடும் இயல்புடையதால் நடுங்கும் குளிர் என்றாள்.  இரைதேடும் முயற்சியை உடைய நாரைகளும் துன்புற்று அம்முயற்சி ஒழிவதற்குக் காரணமாக இருக்கும் இவ்வாடைக் காலத்தில் தலைவர் மட்டும் தம்முயற்சியை ஒழித்து திரும்பி வரவில்லை என்பது உட்குறிப்பு. குறுந்தொகை 150 ஆவது பாடலிலும், ‘இன்னாது எறிக்கும் வாடை’ என்று கூதிர்காலத்தைப் பற்றி ஒரு வரி வருவது கவனிக்கத்தக்கது. 

——

கவிரித  ழன்ன தூவிச் செவ்வாய்

இரை தேர் நாரைக் கெவ்வ மாகத்

——

முள்ளு முருங்கை இலைகளைப் போன்ற சிறகுகளையும் செம்மையான அலகையும் உடைய நாரை தன்னுடைய மீன் பிடிக்கும் முயற்சியைக்கூடக் கைவிடும் அளவுக்கு குளிர்ந்த நீர்த்திவலைகளை விசிறியடிக்கும் குளிர்காலம் என்பது வெகு அழகான காட்சி சித்தரிப்பு.  இதற்கு  திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் சிறகாகிய போர்வையையுடைய நாரைக்கு ஏதந்தரும் வாடை என்றதனானே அணைக்குந் துணையாயினாரைப் பெறாத மகளிர்க்கு அது என்ன இன்னல் தான் செய்யாதாம் என்பதாம் என்று விளக்கமெழுதி இதை இறைச்சி என அடையாளப்படுத்துகிறார். 

தோழி, நம் காதலர் வாடைக்காலத்திலும் வாரார்; அதனால்  நான் வாழேன் என்று தலைவி கூறுகிறாள். 

———

Saturday, August 17, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-102

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-102

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி தோழியிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  ஔவையார்

குறுந்தொகையில் பாடல் எண்; 102

திணை; நெய்தல்

——

உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா

திருப்பினெம் மளவைத் தன்றேவருத்தி

வான்றோய் வற்றே காமம்

சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி ‘யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?’ என்றது. 

காதலரை நினைத்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; நினையாமல் இருப்பது எமது ஆற்றலுக்கு உட்பட்டதன்று. காமநோயோ எம்மை வருந்தச் செய்து வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது;  எம்மால் மருவப்பட்டத் தலைவர் சால்புடையவர் அல்லர். 

———-

சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே

——

தலைவன் சான்றோனல்லன் என இப்பாடலில் தலைவி கூறுகிறாள். காதலில் சான்றோனாக இருப்பதற்கான குணநலன்களை 983 ஆவது திருக்குறள் பின்வருமாறு கூறுகிறது, “ அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மையோடு, ஐந்து சால்பு ஊன்றிய தூண்”.  


என் துயரை அறியாராயின்மையின் அன்பின்மையையும், தமது பிரிவு நீட்டித்தலால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் தூற்றுதலைக் கருதாது இன்னும் ஆண்டே உறைதலின் நாணமின்மையையும், இல்லறம் நிகழ்த்துவார் உரிய காலத்தே தலைவியருடன் இருந்து உலகியலை மறந்தமையால் ஒப்புரவின்மையையும், மெல்லியலாகிய என் துயர் நீங்க வாராமையின் கண்ணோட்டமின்மையும், தாம் கூறிய காலத்தே மீளாமையினால் வாய்மையின்மையையும் உடையரென்னும் கருத்தை உள்ளிட்டு சான்றோனல்லன் என்று கூறினாள் என உ.வே.சா. விளக்கமளிக்கிறார்.  யாம் – தன்மைப் பன்மை, ஏ – அசைநிலை. மரீஇயோர் என்பதற்கு  ச. வே. சுப்பிரமணியன் என்னைக் கூடி மகிழ்ந்த தலைவர் என்றும்   உ. வே. சா. எம்மால் மருவப்பட்ட தலைவர் என்றும் உரை எழுதுகின்றனர்.

நற்றிணை 365 ஆவது பாடலில் வரும்  ‘வான் தோய் மா மலைக் கிழவனை சான்றோய் அல்லை என்றனம் வரற்கே’ எனத் தலைவனை சான்றோனில்லை எனக் கூறும் வரி ஒன்று வருகிறது. 

——

உள்ளின் உள்ளம் வேம்

உள்ளாது இருப்பின்,  அளவைத்து அன்று

——

“உள்ளின் உள்ளம் வேம்

உள்ளாது இருப்பின்,  அளவைத்து அன்று”  என்ற வரிகள் மிகவும் அழகானவை. காதலில் உள்ளம் படும் பாட்டை, நினைத்தாலும் துன்பம், நினைக்காமல் இருப்பதற்கோ வாய்ப்பில்லை என,  எளிமையின் எழிலுடன் சொல்பவை. தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 23 ஆவது வாய்பாட்டிற்கு உரை எழுதுகிற பேராசிரியர் இதைக் காதல் கைம்மிகல் என்ற மெய்ப்பாடு என்று குறிக்கிறார்.  1207 ஆவது திருக்குறள் வரி ‘உள்ளினும் உள்ளம் சுடும்’ , நற்றிணை 184 ஆவது பாடல் வரி, ‘உள்ளின் உள்ளம் வேமே’, குறுந்தொகை 150 ஆவது பாடல் வரி “உள்ளின் உள்நோய் மல்கும்’ ஆகியன இப்பாடல் வரிகளோடு இணைத்து வாசிக்கத் தக்கன. 

——

காமம் வான்தோய்வற்று

—-

காமம் வானத்தைப் போல வளர்ந்துகொண்டே இருப்பது, உள்ளின் உள்ளம் வேம். உள்ளாதிருப்பின் எம் அளவைத் தன்று. 

—-

 

Tuesday, August 13, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-1

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தோழி தலைவனிடம் கூறியது

—-

இயற்றியவர்:  திப்புத்தோளார்

குறுந்தொகையில் பாடல் எண்; 1

திணை; குறிஞ்சி

——

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

கழறொடிச் சே எய் குன்றம் 

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

——— 

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

வெற்ப, போர்க்களம் இரத்ததாற் செந்நிறத்தையுடைய களமாகும்படி, அசுரர்களைக் கொண்று இல்லையாக்கிய, இரத்தத்தாற் சிவந்த திரண்ட அம்பையும், சிவந்த கொம்பையுடைய யானையையும் வீரவளையையுமுடைய முருகக் கடவுளுக்குரிய இம்மலையானது சிவப்பாகிய பூங்கொத்துள்ள காந்தளை உடையது.

——-

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த

——

தோழியர் கூட்டத்தை அணுகிய தலைவன் செங்காந்தள் பூவைக் கையுறையாகக் கொடுத்து தோழியின் பால் தன் குறை கூற அவள் செங்காந்தள் எங்கள் மலையிலேயே அதிகமாய் இருப்பதால் இதனை வேண்டாம் என்று கூறி மறுப்பதாக இப்பாடல் அமைந்துள்ளது. 


காந்தள் பூவினால் நாம் குறையுடையவர்கள் அல்லர் என்று தலைவனுக்குக் உணர்த்திய வழி இப்பாடல் கூற்றெச்சமாகவும் சேஅய் குன்றம் காத்தட்டு அது காண்பாய் என்றால் காண் எனத் தோழி குறியிடம் உணர்த்தியதால் குறிப்பெச்சமாகவும் இப்பாடல் தொல்காப்பியம் செய்யுளியல் 208 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதும் பேராசிரியரால் விளக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம்  எச்சவியல் 45 ஆவது சூத்திரத்திற்கு உரை எழுதுகிற நச்சினார்க்கினியர் ‘யாம் காந்தள் பூவினால் குறைவிலம்’ என்பதை சொல்லெச்சத்திற்கு எடுத்துக்காட்டாய் விளக்குகிறார்.  செங்களம்பட - போர்க்களம் இரத்தத்தாற் செந்நிறத்தையுடைய களமாகும்படி, அவுணர் கொன்று தேய்த்த- அசுரர்களை கொன்று இல்லையாக்கிய என பொருள் பெறும். 

———

செங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்

——

செங்கோலம்பு - செம்மை, வளைவின்மையுமாகும். முருகக் கடவுளுக்கு அம்பு உண்மை, பரிபாடலில் வரும் “பொறிவரிச் சாபமும்” என்ற அடியாலும் பெறப்படும். செங்கோடு என்பது பகைவரைக் குத்திச் சிவந்த கொம்பு. முருகக்கடவுளின் ஊர்திகளில் யானை ஒன்றென்பதும் அதன் பெயர் பிணிமுகமென்பதும், அருள் செய்வதற்கும் போர் செய்வதற்கும் யானை ஏறி அவர் செல்வாரென்பது, “ வேழமேல் கொண்டு”, “அங்குசங் கடாவ வொருகை”, “ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி” ஆகிய திருமுருகாற்றுப்படை வரிகளாலும் அறியலாம். 

—-

கழறொடிச் சே எய் குன்றம்

——-

கழறொடி- உழலுந்தொடி. சேஎ என்றது அளபெடுத்த வழியும் விளியன்றி நின்றது. திருமுருகாற்றுப்படையில் வரும் “செவ்வேற் சேஎய் சேவடி” என்பது போல. சேஎய் – இன்னிசை அளபெடை குன்றம்- மலை. சேஎய் – செய்யோன் என்பதின் சிதைவு

——

குருதிப் பூவின் குலைக்காந் தட்டே

——

குருதிப்பூவின் குலைக்காந்தளென்றது முதற்கேற்ற அடையடுத்து நின்றது. திருமுருகாற்றுப்படையில் வரும் “ கரும்பும் மூசாச் சுடர்ப் பூங் காந்தள்”, தொல்காப்பியம் புறத்திணையியல் 5 ஆம் வாய்பாட்டில் வரும் “வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்” , நற்றிணை 399 ஆவது பாடல் வரி “குருதி ஒப்பின் கமழ் பூங் காந்தள்”  ஆகியனவும் இப்பாடலின் அடியோடு இணைத்து காந்தள் முருகனின் மலர் என அறியத்தக்கவை. வெண்காந்தளும் உண்டென்பதினால் குருதிப்பூ என்றாள். குருதிப்பூ -இரத்தம் போன்ற நிறத்தையுடைய பூ. கொத்தாகவே அது பூக்கும் என்பதினால் குலைக்காந்தாள் என்றாள். 


பொ. வே. சோமசுந்தரனார்  இச் செய்யுளை பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் ‘தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’ என்னும் துறைப்படுத்தோதுவர் என மேலும் விளக்கமெழுதுகிறார்.  அதாவது, தலைமகனது வரவு உணர்ந்த தோழி தலைமகளைப் பொழிலின்கண் ஒரு குறியிடத்தே கொண்டு சென்று, “சேஎய்குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டு ஆண்டுத் தெய்வம் உறைதலின் நின்னால் வரப்படாது; யான் சென்று கொய்து வருவேன்; நீ அதுகாறும் இப்பொழிலிடத்தே நிற்கக்கடவாய்” என நிறுத்தி நீங்குதல் என்பதாம்.  தமிழண்ணல்  எங்களிடம் இருப்பதால் வேண்டாம் என மறுக்கும் சொல் பாடலில் இல்லை.  சொல் எஞ்சி குறைந்து நிற்பதால் இதைச் ‘சொல்லெச்சம்’ என்பர் என தெளிவுபடுத்துகிறார்.   திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் அம்பின், பூவின் என்பவற்றிலுள்ள ‘இன்’ சாரியைகள் என இலக்கண விளக்கம் தருகிறார். 


இப்ப்பாடல் ஆசிரியர் தீப் புத்தேளார் எனப் பாடபேதம் கொண்டு அவரை அங்கியங் கடவுள் என்ற பெயரினராக இராகவையங்கார் கருதுகிறார், செவ்வேலை வாழத்திய பாடலுக்குப் பின் குறுந்தொகையின் முதல் பாடலாக அவன் வீரத்தை உணர்த்தும் இப்பாடல் அமைந்துள்ளது. முருகனின் குன்றம். அவனுடைய மலராகிய செங்காந்தள் இப்பாடலில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. 

——

குறுந்தொகையின் முதற்பாடலை முதல் நூறு பாடல்களுக்கு உரை எழுதியபின் 101 ஆக சிறப்பிக்க எண்ணியிருந்தேன். இத்தோடு குறுந்தொகையின் முதல் 101 பாடல்களுக்கான உரை நிறைவு பெறுகிறது.

——