Thursday, August 29, 2024

குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

 குறுந்தொகை மூலமும் வாசிப்பும்-107

—-

எம்.டி.முத்துக்குமாரசாமி

——

தலைவி சேவலிடம்  கூறியது

—-

இயற்றியவர்:  மதுரைக் கண்ணனார்

குறுந்தொகையில் பாடல் எண்; 107

திணை;  மருதம்

——

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

நள்ளிருள் யாமத் தில்லெலி பார்க்கும்

பிள்ளை வெருகிற் கல்கிரை யாகிக்

கடுநவைப் படீஇயரோ நீயே நெடுநீர்

யாண ரூரன் றன்னோடு வதிந்த

ஏம வின்றுயி லெடுப்பி யோயே

——

உ.வே.சாவின் குறுந்தொகைப் பதிப்பிலிருந்து பாடலுக்கான பதவுரை:

——

குவிந்த கொத்துக்களையுடைய செங்காந்தளின் ஒள்ளிய பூவைப் போன்ற செக்கச் சிவந்த கொண்டையையுடைய கோழிக்கூட்டங்களை வலிந்து கொண்ட சேவலே, ஆழமான நீரினால் உண்டாகும், புது வருவாயை உடைய ஊரை உடையவனோடு தங்கிய இன்பத்தைத் தரும் இனிய துலினின்றும் எம்மை எழுப்பிய நீ செறிந்த இருளையுடைய இடையிரவின்கண் வீட்டிலுள்ள எலிகளை உண்ணும் பொருட்டு ஆராயும் காட்டுப்பூனையின் குட்டிக்குப் பல நாள் இட்டுவைத்து உணவாகி நீ மிக்க துன்பத்தை அடைவாயாக. 

—-

காமமிக்க கழிபடர் கிளவி

——

தலைவன் பொருள் ஈட்டி மீண்டவனாக அவனை நெடுநாட்களாகப் பிரிந்த துயர் தீரக் கூடியிருக்க எண்ணிய தலைவிவிக்கு ஓரிரவு மனநிறைவை உண்டாக்கவில்லை. காலை விரைவில் புலர்ந்தது கண்டு அவள் துயருற்றாள். காம மயக்கத்தினால் புலர்ந்தது என்று உணர்த்திய சேவலை கடுவன் பூனை கொல்லட்டும் என சபித்தாள். காம மிகுதியில் தலைவி சேவலிடம் கூறியதாக இப்பாடல் இருக்கிறபடியால் இப்பாடல் காமமிக்க களிபடர் கிளவி என அழைக்கப்படுகிறது. 

—-

படீஇயரோ நீயே

—-

காட்டுப்ப்பூனைக் குட்டிக்கு வீட்டில் கிடைக்கும் எலியே போதுமானது. அதற்கு சேவலே கிடைத்தல் பலநால் கவலையின்றி உண்ண இயலும். சேவல் கோழிக் கூட்டத்தையே வைத்திருக்கும் இயல்புடையது, தலைவனின் இயல்பும் இவ்வாறு இருத்த்ற்கூடும் என்பதும் தலைவி குறிப்பினால் உணர்த்துகிறாள். அதிக நேரம் தலைவனோடு கூடப்பெறும் இன்பத்தை கெடுத்தமையால் சேவலை பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்கிறாள். சேவலைக் கொன்று இரையாக்குவேன் என்று தலைவி கூறுவதாகவும் கொள்ளலாம். ‘யாமத்துப் படீஇயர்’ என்றது அது தன் உறவை யாமத்தில் பிரித்ததாகவும் பொருள்தரும். ‘படீஇயரோ நீயே’ என்றது சேவலை நேரடியாகக் குற்றஞ்சுமத்துதலாகும். ‘கடு நவைப் படீஇயர்’ என்றது கூடிய தண்டனை பெறுக எனவும் பொருள்படும்.  படீஇயர் – படுவாயாக , சொல்லிசை அளபெடை, வியங்கோள் வினைமுற்று விகுதி,  இகழ்ச்சிப்பொருளில் வந்தது. 

குவியிணர்த் தோன்றி யொண்பூ வன்ன

தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்

—-

தலைவி கடுவன் பூனைக்குட்டிக்கு இரையாக்குவேன் என்று சொல்லும் சேவலின் விவரிப்பு இந்தப் பாடலில் அழகானது. குவி இணர் – குவிந்த  பூங்கொத்து, வினைத்தொகை,  தோன்றி – செங்காந்தள் , ஒண் பூ –  ஒளிர்கின்ற பூ , அன்ன – போன்ற , செந்நெற்றி –  கொண்டை, -நெற்றி – சேவலின் கொண்டைக்கு ஆகுபெயர் - கணங்கொள் சேவல் – கூட்டத்தில் இருக்கிற சேவல். குவிந்த செங்காந்தள் போன்ற கொண்டையையுடைய கோழிக்கூட்டத்தின் நடுவில் இருக்கிற சேவல். 


துயிலெழுப்பிய சேவலே நீ கடுவனுக்கு இரையாவாயாக, பொழுது புலர்ந்தமையால் நாம் துன்புறுவேனானேன் எனத் தலைவி கூறுகிறாள். 

—-



No comments: