"A man’s reach should exceed his grasp, or what’s a heaven for?”
——
இன்று காலை நடைக்குக் குளிரில் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டே சென்றபோது, பனி மூட்டத்தில் அந்த மானை மீண்டும் பார்த்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு பார்த்த அதே மான்தான் இது என்று நினைத்துக்கொண்டேன். ஐஐடி வளாகம், கிண்டி நேஷனல் பார்க் இவற்றிலிருந்து மான்கள் வெளியே சாலைகளுக்குத் தப்பி வருவது பல வருடங்களுக்கு முன்பு சகஜம்தான் என்றாலும், சமீபமாக நான் மான்களையே பார்த்ததில்லை. இப்படிக் குறைந்த இடைவெளியில் மானைச் சாலையில் பார்ப்பது அதிசய நிகழ்வுதான். போன தடவை பார்த்தபோது வீட்டிற்கு வந்து "On a Winter Morning Clearing" என்ற கவிதையை எழுதினேன். அசையாமல் நின்றிருந்த மான் என்னிடமிருந்து
"its eyes holding the stillness of things
that have learned silence as survival.
You think: it is waiting,
but perhaps it is only enduring.”
என்ற வரிகளைக் கோரின.
அதிலிருந்து நான் அந்தியில் என்னைச் சாப்பிட அழைக்கும் அம்மாவையும், ராபர்ட் பிரௌனிங்கின்
"A man’s reach should exceed his grasp, or what’s a heaven for?"
என்ற கவிதை வரிகளை மேற்கோள் காட்டும் அப்பாவையும் எப்படி நினைவு கூர்வதற்கான தொடர்புறுத்தல் ஏற்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. இந்தத் தொடர்புறுத்தல்களின் கண்டுபிடிப்பே கவிதை எழுதுவதன் பாக்கியம்.
கவிதையை வாசித்த மிருணாளினி, நான் ஒரு கவிதையை எழுதுவதற்கு ஆங்கிலம் அல்லது தமிழ் என்று எப்படித் தெரிவு செய்கிறேன் என்று கேட்டார். அவர் கேட்டபோது எனக்கு உடனடியாக எதுவும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால் இப்போது, இந்தத் தொடர்புறுத்தல்களின் வசீகரமே, அவற்றின் சாத்தியப்பாடுகளே, அவற்றின் வலுவே எந்த மொழி என்பதைத் தீர்மானிக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் மானைப் பார்த்ததைக் கவிதையாக்க எண்ணும்போது, உடனடியாக எனக்கு மான் என்ற சொல் கிளைகளுடைய கொம்புகளை உடைய கலைமான் என்ற மனப்பிரதிமையை உண்டாக்குகிறது. அது அம்மா, அப்பா என்று நீண்டிருக்க வாய்ப்பில்லை. "Deer" என்ற ஆங்கிலச் சொல் என்னிடம் கலைமான் என்ற குறிப்பீட்டினை (signified) உண்டாக்கவில்லை. இந்த semiotic circle பாதி நனவுடனும் பாதி நனவற்றும் இயங்குகிறது என்றாலும், இந்த shift in language register இவ்வாறாகத் தொடர்புறுத்தல்கள் மூலமாகத்தான் நடைபெறுகிறது.
இன்று காலை பார்த்த மான் என்னிடத்தில் ஸ்ரீ அரவிந்தரின் "புலியும் மானும்" என்ற கவிதையை நினைவுபடுத்தியது. கவிதையில் அரவிந்தர், வலுத்தது வாழும், பலகீனமானது அழியும் என்ற டார்வினீய கோட்பாடு உண்மையாக இருக்குமென்றால், வலுவான புலி இனம் ஏன் அருகிவிட்டது, பலவீனமான மானினம் எப்படி நிலைபெற்று வலுவாகியிருக்கிறது என்று கேள்வி எழுப்பியிருப்பார். இதைத்தான் பிரௌனிங், மனிதனின் கைப்பிடிக்கு அகப்படாததை நோக்கி மனித மனம் நீளவில்லையென்றால், சொர்க்கம் என்று ஒன்று இருப்பதற்குத்தான் என்ன பொருள் என்று வினவியிருப்பாரோ?
No comments:
Post a Comment