சமூக நடத்தை ஒழுக்க விதிகளையும் (morals) அறத்தினையும் (ethics) நுட்பப்படுத்தி வேறுபடுத்துவதில் பின் நவீனத்துவ இலக்கியவாதிகளும் தத்துவ அறிஞர்களும் ஒத்துப்போகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். காண்ட்டின் சிந்தனையை நடத்தை ஒழுக்க விதிகளுக்கு உட்பட்டது என்று தெரிதா விமர்சிப்பதும் தத்துவத்தை கலையும் இலக்கியமும் பேசுகின்ற அறம் நோக்கி நகர்த்திச் செல்வதற்குத்தான். இந்த தத்துவ சரடு பின் நவீன தத்துவத்திலும் இலக்கியத்திலும் பல தளங்களில் நிகழ்த்திக்காட்டப்படுகிறது. இவற்றைச் சுருக்கிச் சொல்வது அவற்றின் நுட்பத்தினையும் சிக்கலையும் எளிமைப்படுத்துவதாகும் என்றாலும் தெளிவிற்காக இவற்றைச் சொல்லி வைக்கலாம்.
இதன் ஒரு தளம் உலகளாவிய (நவீனத்துவ) லட்சியங்களைப் பேணுவதற்கு எதிராக சிறு பண்பாடுகளின் மானிடவியல் தரவுகளையும், வாழ்வியலையும், தருணங்களையும், குறுங்கதையாடல்களையும் (micro narratives) முன் வைப்பது.
இரண்டாவது தளம் சட்டம், அரசு, அரசின் இறையாண்மை ஆகியவற்றை சமூக ஒப்பந்தத்தின் அடிப்படை பின்னல்களாக முதன்மைப்படுத்தாமல், தனி மனிதன், குழும விழுமியங்கள், cosmopolitanism, கருத்தாக்கங்களின் கட்டுக்கோப்பு (integrity) ஆகியவற்றினை சமூக ஒப்பந்தந்தத்தின் (social contract) தூலமான அலகுகளாகக் காணுதல்.
மூன்றாவது தளம் இலக்கியத்திலும் தத்துவத்திலும் எதனையும் இயல்பானது இயற்கையானது என்று ஏற்றுக்கொள்ளாமல் அவற்றின் வரலாற்றினை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் மனித வாழ்வின் புதிர்த்தன்மையினை புதிராகவே வைத்திருத்தல்.
எளிய தீர்வுகள், எளிமைப்படுத்துதல்களின் சௌகரியம் ஆகியவற்றை இலக்கியத்தில் நிராகரிப்பது ஒரு வகையில் சுலபம். ஆனால் தத்துவத்தில் இதை சாதிப்பது மிகவும் கடினமான காரியமாகும். தெரிதாவின் எழுத்து முறை ஒருவகையான இரட்டைப்பேச்சாக ( double speak) இருப்பதும் இலக்கியத்தின்தன்மையினை அடைவதும் இதனால்தான்.
நபக்கோவ் இலக்கியம் வாழ்வின் புதிர்த்தன்மையினை முன்வைக்கக்கூடியது எந்த வகையான விளக்கங்களுக்கும் ஆட்படாதது என்பதை விளக்கும்போதெல்லாம் இலக்கியத்தை நாட்டுப்புற/தேவதைக் கதைகளோடுதான் ஒப்பிடுகிறார். நபக்கோவின் புகழ்பெற்ற கூற்றுகளுள் ஒன்று: "Great novels are above all great fairy tales . . . literature does not tell the truth but makes it up." என்பதாகும்.
No comments:
Post a Comment