Friday, December 19, 2025

நபக்கோவின் நாவல் “ விரக்தி”



நல்லி திசை எட்டு கவிதை மொழிபெயர்ப்புக்கான விருதை ( மஹ்மூத் தர்வீஷின் “நீ ஏன் குதிரையைத் தனியாக விட்டாய்?”  -  நூல் தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடு)  வாங்க நான் சென்றிருந்தபோது வண்ணநிலவன் அவர்கள் நிகழ்த்திய பிரமாதமான உரை ஒன்றைக் கேட்டேன். மொழிபெயர்ப்புகளில் ஏன் படைப்பிலக்கியவாதிகள் ஈடுபடுகிறார்கள் என்றால் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் தங்கள் சமகால படைப்பிலக்கியச் சூழல் திருப்தியற்றதாக இருக்கிறது அதை சமன்படுத்த அல்லது அச்சூழலை சவாலுக்குள்ளாக்க அவர்கள் மொழிபெயர்ப்புகளில் ஈடுபடுகிறார்கள் என்று  வண்ணநிலவன் சொன்னார். வண்ணநிலவனின் கருத்து எனக்கு உடன்பாடானதாக இருந்தது. ஒர் அழகியல் அல்லது அரசியல் தலையீட்டினை நிகழ்த்துவதே கவிதை, நாவல், கோட்பாடுகள் ஆகியவற்றை மொழிபெயர்ப்பதன் தலையாய நோக்கம் என்று நான் கூடுதலாகச் சொல்வேன்.  

 விளாடிமிர் நபக்கோவின் “விரக்தி” நாவல் தாஸ்தோவ்ஸ்கியின் நாவல்களின்  அழகியலுக்கும் கதையாடல்களுக்கும்  (narrative) எதிரான கலைப்படைப்பு மட்டுமல்ல.  இன்றைய நவீன உலகம் 'உண்மைக்குப் பிந்தைய உலகம்' (Post-truth world) என்று அழைக்கப்படுகிறது. தரவுகளையும்  உண்மைகளையும் விட, தனிப்பட்ட நம்பிக்கைகளும் உணர்ச்சிகளுமே பொதுக்கருத்தை உருவாக்கும் காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில், விளாடிமிர் நபக்கோவின் “விரக்தி” நாவலை வாசிப்பது அவசியமாகிறது.  நம்பகத்தன்மையற்ற கதைசொல்லியும் அகவய மாயையும் நிறைந்தவன் இந்த நாவலின் நாயகன் ஹெர்மன் கார்லோவிச். ஹெர்மன் ஒரு சாக்லேட் தொழிற்சாலை அதிபர். இவன் ப்ராக்  நகரில் பெலிக்ஸ் என்ற நாடோடியைச் சந்திக்கிறான். அந்த நாடோடி தன்னைப் போலவே, அச்சு அசலாகத் தனது இரட்டை உருவம் (Doppelgänger) போல இருப்பதாக ஹெர்மன் நம்புகிறான். ஆனால், இது ஹெர்மனின் மனதில் மட்டுமே இருக்கும் ஒரு கற்பனை. உண்மையில் அவர்கள் இருவருக்கும் எந்தத் தோற்ற ஒற்றுமையும் கிடையாது. இங்குதான் நபகோவ் வாசகர்களுக்கு ஒரு முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார்: ஒருவன் தான் நம்புவதே உண்மை என்று சாதித்தால், யதார்த்தத்தின் நிலை என்ன?

தரவுகளுக்கும் உண்மைகளுக்கும் மதிப்பளிக்காத ஒரு சமூகம், இறுதியில் ஹெர்மனைப் போலவே விரக்தியில் (Despair) முடியும் என்பதை நபக்கோவ் மிக நுட்பமாக எச்சரிக்கிறார். நபக்கோவின் “விரக்தி” நாவல் தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடாக எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வெளியாக இருக்கிறது. வாசித்துப் பாருங்கள்.

“விரக்தி”  - உலக இலக்கிய கிளாசிக் நாவல் -

விளாடிமிர் நபக்கோவின் DESPAIR

தமிழில்: எம்.டி. முத்துக்குமாரசாமி

அட்டை ஓவியம்: செல்வா செந்தில் குமார்

• அட்டை வடிவமைப்பு: ஆர்.சி. மதிராஜ்

• ISBN: 978-93-92543-42-5

• பக்கங்கள்: 272

• விலை ரூ. 350

தமிழ்வெளி வெளியீடு தொலைபேசி எண் 91- 9094005600 

No comments: