Tristes Tropiques
—
மானிடவியல் துறையில் கிளாட் லெவிஸ்டிராசின் ‘துயர்மிகு வெப்பமண்டல பிரதேசங்கள்’ (Tristes Tropiques) போல கவித்துவமாக எழுதப்பட்ட நூல் வாசிக்கக் கிடைப்பது அரிது. லெவிஸ்டிராசின் இந்த நூல் அவருடைய இதர துறை சார் களப்பணி விபரங்களும், ரத்த உறவு வரைபடங்களும் நிறைந்த Elementary Structures of Kinship, Structural Anthroplogy ஆகிய நூல்கள் போல அல்லாமல் ஒரு தொழில்முறை மானிடவியலாளனின் சுயசரிதை போல எழுதப்பட்டிருப்பது. மானிடவியலின் கலைச்சொற்கள் அனைத்தையும் முழுமையாக புத்தாக்கம் செய்த லெவிஸ்டிராசின் மையக் கருத்துகள் அனைத்துமே இந்த நூலில் இருப்பதை கவனப்படுத்த வேண்டும். லெவிஸ்டிராசின் எழுத்தும் சிந்தனையும் எதை சாதித்தது? தென்னமெரிக்க பழங்குடிகளிடையே களப்பணி செய்த தரவுகளின் அடிப்படையில் உருவான லெவிஸ்டிராசின் சிந்தனை முக்கியமாக மனித மூளையின் திறன் என்பதை வைத்து மட்டும் பார்த்தால், உலகின் அத்தனை பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் சமமானவர்களே இதில் primitive/ advanced என்ற ஏற்றதாழ்வுகள் முட்டாள்த்தனமானவை என நிறுவுகிறது. தென்னமெரிக்க பழங்குடி மூப்பனால் அல்லது மூதாட்டியால் வாய்மொழியாக எடுத்துரைக்கப்படும் ரத்தவழி உறவுகளை (kinship relations) வரைபடமாக்கும் லெவிஸ்டிராஸ் அது கணித, விஞ்ஞான சூத்திரங்களை விட கடினமானதாகும் சிக்கலானதாகவும் இருப்பதை கவனப்படுத்துகிறார். இந்த சிக்கல்களின்வழி சிந்திக்கும் பழங்குடி மனம் மேற்குலகின் ‘வளர்ந்த’ சமூகத்தைச் சார்ந்த, உயர்கல்வி பெற்ற விஞ்ஞானியின் சிந்தனைக்கு நிகரான திறனையும் சாமர்த்தியத்தையும் கொண்டிருப்பதையும் லெவிஸ்டிராசினால் நிறுவமுடிகிறது. தென்னமெரிக்க பூர்வகுடிப் பெண்கள் தங்கள் முகங்களில் அலங்காரமாக வரையும் சித்திரங்களில் அந்தந்த இனக்குழுக்களின் கூட்டுக்கனவுகள் என்பதை லெவிஸ்டிராஸ் உலகுக்கு சொல்கிறார். அந்த பூர்வகுடிகளின் கிராமங்களின் அமைப்பும் குடிசைகளின் அமைப்பும் இயற்கையின் விஸ்வரூபத்தினை எதிர்கொண்டதன் விளைவு எனவும் லெவிஸ்டிராஸ் நிறுவுகிறார். இந்த பூர்வ குடிகள் வாழும் பிரதேசங்கள் மேற்குலகினால் அழிக்கப்பட்டன எனவே அவை துயர் மிகு பிரதேசங்களாய் இருக்கின்றன. தன் அறிவுத்தேட்டத்திற்காகவும் வியாபார பெருக்கத்திற்காகவும் பூர்வகுடி உலகுகளோடு தொடர்பு கொண்ட மேற்குலகு- தென்னமெரிக்கவைப் பொறுத்தவரை ஸ்பானிஷ்காரர்கள்- ஏன் இந்த ம்க்களைக் கொன்றழித்தார்கள்? லெவிஸ்டிராசின் நூலை வாசிக்கும் ஜார்ஜ் ஸ்டீனர் ஆதாம் ஏவாள் கால ஆதியையும், இழந்த சொர்க்கத்தையும், தவறவிட்ட தோட்டத்தையும் அதன் கள்ளமற்ற இன்பத்தையும் பூர்வகுடிகள் நினைவுபடுத்துவதால் உலக அந்தத்தைக் காணப்போகும் மேற்குலகு (Apocalyptic Western world) பெரும் கோபத்தோடு அவர்களை அழித்தது என எழுதுகிறார்.
---
தோரோ, டாஃப்லர், லெவிஸ்டிராஸ்
—
ஆல்வின் டாஃப்லரின் (Alvin Toffler - Future Shock புத்தக ஆசிரியர்) Third Wave வெளிவந்தபோது அதை மிகவும் ஆர்வமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். ‘மூன்றாம் அலை’ , எதிர்காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட பொருளாதார அமைப்புகள் உடைந்து சிறு சிறு பொருளாதார அமைப்புகள் - ஜே.சி.குமரப்பா எழுதிய காந்திய தன்னிறைவு பெற்ற கிராம அமைப்புகள் போன்றவை- வலுப்பெறும், அவை புதிய வாழ்வியல் முறையாக மாறும் என்று பேசியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. என்ன அழகான கனவு அது என்று இன்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி சிறு அமைப்புகளின் தன்னிறைவு இனி சாத்தியப்படுமா, அதன் சாத்தியங்களை என் வாழ்நாளில் காண்பேனா என்றெல்லாம் இப்போது தன்னியல்பான தவிப்புகள் ஏற்படுகின்றன. காந்திய சிந்தனையின் பகுதியான தோரோவின் (Throreau) இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதன் கனவு முன்பே தீய்ந்துபோயிருந்தது. இயற்கை அதனுடைய காட்டு விகாசத்தில் கொடூரமானது; அதை மனித வாழ்க்கைக்கு ஏற்றார்போல பண்படுத்தாமல் வாழ இயலாது என்பது பொதுப்புத்திக்கே எட்டக்கூடியதுதான். அதைப் பிரமாதமாக வார்த்தைப்படுத்தியவர் லெவிஸ்டிராஸே ஆவார். அமேசான் காடுகளில் இயற்கையின் விகசிப்புகளைப் பார்த்து மிரண்டுபோன லெவிஸ்டிராஸ் தெற்கு ஃபிரான்சில் இய்ற்கையும் பண்பாடும் சம அளவில கலந்துள்ள இடங்களே மனித வாழ்க்கைக்கு ஏற்றவை என்று எழுதினார். தோரோவின் wild nature பற்றிய அதீத கற்பனைகள் யாதார்த்தத்தில் செல்லுபடியாகதவை. இயற்கையை அழிக்காமல், அளவாக முறையாக பயன் படுத்துவதன் balance என்ன என்பதே மீண்டும் மீண்டும் எழுகின்ற கேள்வி. அதற்கு விடையாக தன்னிறைவு பெற்ற சிறு அமைப்புகளைத் தவிர வேறு விடைகளும் இப்போதைக்கு இல்லை. நமக்கு அப்படி ஒரு வாழ்விற்கான ஏக்கம் இருக்கிறதா, என்ன?
---
No comments:
Post a Comment