Saturday, December 20, 2025

லயம், இசைவு, சந்தம்

 

மானைக் காலை நடையின் போது பார்த்தது, (On a Winter Morning Clearing), தண்ணீர் ஜாடியை உயிருள்ளது போல பாவித்து எழுதுவது (Still Life, Limited Edition) போன்ற கவிதைகளை ஒரே நாளில் நாலைந்து மணி நேரத்தில் எழுதிவிட்டாலும் எல்லாக் கவிதைகளையும் அப்படி என்னால் எழுத முடிவதில்லை. சில கவிதைகளை நான் வருடக்கணக்கில் மாற்றி மாற்றி எழுதி இறுதி வடிவம் வருவதுவரை எழுதியிருக்கிறேன். சில சமயங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாற்றி மாற்றி எழுதிப்பார்த்ததும் உண்டு.  “The Guava's Cadence” கவிதை அதன் இறுதி வடிவத்தை அடைய நான்கு வருடங்களானது. 

லயம் என்றால் என்ன, அக வாழ்வுக்கும் புறவாழ்வுக்குமான லயம் என்பதை எப்படி சாதிப்பது போன்ற கேள்விகள் என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தபோது இந்தக் கவிதையை எழுத ஆரம்பித்தேன். லயம் என்பதே மனிதனுக்கு சாத்தியமில்லையோ என மனம் வெதும்பி ஒரு முறை ஒரு கவிதையில் கவலை தெரிவித்திருக்கிறேன். மற்றொரு கவிதையில்  

“சொற்களின் நினைவுகளில்

மகரந்தங்களை யாசிக்கிறாய்

ஏதோ ஒரு கூடுதலில்

லயம் கூடுமென நினைக்கிறாய்

ஏதோ ஒரு ஒடுங்குதலில்

உத் கீதம் எழுமென நம்புகிறாய்

ஏதோ ஒரு அபத்தம் பற்றுகையில்

அழகு விகசிக்குமென ஏங்குகிறாய்” 

என்று எழுதி லயமும் அழகும் அபத்தம் பற்றியாவது கூடி வராதா என்று ஏங்கியிருக்கிறேன். இன்னொரு கவிதையில் லயம் தொலையும்போது,

“குளிர் நீர் பூவாளி அடியில்

தினமும் எவ்வளவு நேரம் நிற்கவேண்டும்?

எந்தப் பறவை எப்போது வாலாட்டும்?”

என்று எரிச்சல் அடைந்திருக்கிறேன். இன்னொரு கவிதையிலோ

“லயம் மட்டுமே உயிரின் சாத்தியம்

லயம் மட்டுமே உயிரின் சத்தியம் என்பதாக

ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் 

இடையில் ஒளிந்து ஒளிரும் 

விஸ்வரூபத்தை காண்பிக்க இயலாது

காணத்தான் வேண்டும்” 

என்று  சூளுரைத்திருக்கிறேன். “தேநீர் புத்தகம்” பற்றி எழுதியபோது  “இந்நூல் இக்கணத்தின் தற்காலிகத்துக்கு எழுதப்பட்ட ஒரு காதல்கடிதம். அது பிழைபட்ட, முழு நிறைவானதல்லாத, கடந்து கொண்டே இருக்கும் கணங்களைக் கொண்டாடுகிறது.  அது முடிக்கப்படாமல், முழுமையற்றதாக நம் கண் முன்னே இருப்பதை மனதால் நிறைவு செய்து சௌந்தர்யத்தை அகவயமாக்கச் சொல்கிறது. அது நம்மை சுற்றியுள்ளவையோடு ஒரு லயம் சாத்தியமென பரிந்துரைக்கிறது. “ என்று எழுதி ஆசுவாசமடைந்திருக்கிறேன். 

“ரோஜாமொக்கின் பத்து சம்பவங்கள்” அடுக்கு  நீள் கவிதையில், உட்கவிதை ஒன்றில்,

“ரோஜாமொக்கு ஒரு கண்ணாடிக்கு ஏங்குகிறது

தன் இதழ்களின் மென்மையில்

தன் இதழ்களின் சுழிகளில்

தன் இதழ்களில் ஒளிந்திருக்கும்

தேன் துளியில் 

அழகு லயம் கொண்டிருக்கிறதா என்று அறிய.

ரோஜா மொக்குக்கு கண்ணாடிகள் கிடைப்பதில்லை.”

என்று அறிக்கை சமர்ப்பித்திருக்கிறேன். குறுந்தொகைப் பாடல் ஐந்திற்கு, நரிவெரூஉத் தலையார் இயற்றியதற்கு ‘கண்களின் துரோகம்’ என்று உரை எழுதி அகமும் புறமும் லயம் தொலையும் சூழலை பின்வருமாறு விவரித்திருக்கிறேன்:

“இந்தக் கவிதை இயற்கையின் படிமங்களாலானது. பகிர்ந்துகொண்ட மதியங்களில், எதிரொலிக்கும் அறையினுள், தோழிக்குச் சொல்லும் தலைவி ‘இது காம நோயோ’ என வினவுகிறாள்; அவளுடைய மனதின் ‘மெல்லிய கடற்கரையில் புலம்பும் அலைகளை’ அங்கீகரிக்கிறாள், அடையாளம் காண்கிறாள். அந்த உள் மனதின் நிலப்பகுதி அவள் கண் முன்னே காண்பதாகிய, குருகுகளுக்குத் தூங்க நிழலும் கிளைகளும் தரும் புன்னை மரத்திலிருந்து வேறுபட்டதாய் இருக்கிறது; குருகுகள் தூங்குகின்றன, அலைகள் எழும்பி விழுகின்றன, கடற்கரை நீர்த்திவலைகளால் நிறைந்திருக்கிறது. கடற்கரையும், நீரும், நீர்த்திவலைகளுமான படிமமே தலைவனாகவும் காமமாகவும் தன் பௌதீக இன்மையின் மூலம் தலைவியின் கண்களைத் துரோகமிழைக்க வைக்கின்றன; மலரைப் போல பல இதழ்கள் கொண்ட அவள் கண் மையிட்ட கண்கள் ‘பாடு ஒல்லா’ நிற்கின்றன; அதாவது கண்கள் மூடுவதற்கு ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றன. பல்லிதழ் என்பது பூவிற்கு ஆகுபெயர், உ.வே.சா இதை தாமரை என்றே குறிப்பிடுகிறார். உண்கண் என்பது மையிட்ட கண்கள். குருகுகள் புன்னை மரமென லயம் கூடியிருக்கும் சுற்றுச் சூழலுக்குப் பொருந்தாமல் தானியங்கியாய் கண்கள் துரோகமிழைக்கின்றன. A dissonanace, a symphony out of tune.”

‘நீருலகு” எனும் அடுக்கு நீள் கவிதையில் லயம் கடைசியாக,

“இழந்ததும் பெற்றதுமாக

மறந்ததும் அறிந்ததுமாக  

கடலாழத்தில் மீன்

மீனாக இருப்பதில்லை

அது மீனாக இருப்பதிலிருந்து விடுபடுகிறது

அது அலையாகிறது

அது ஒளியாகிறது

அது கடலாகிறது

அது அவ்வாறாகவே பேரிருப்பாகிறது. “ 

என்று ஒரு சமாதானத்திற்கு வந்திருக்கிறேன். 

இப்படியாக லயத்திற்கான தேடல்  என்னை அலைக்கழித்திருக்கிறது. அதை இசைவு  என்று பெயர் மாற்றியபோது அதே ‘நீருலகு’ நீள்கவிதையில் 

“ஒளி தீண்டி மீண்டும்

ஆழத்துள் செல்கையில்

மீன் தன்னோடு அந்த பிரகாசத்தை

எடுத்துச் செல்கிறது

பார்த்தலுக்கு அப்பாற்பட்ட அறிதல்

ஒரு துண்டு வானம்

ஒவ்வொரு செதிளின் மடிப்பிலும்

பொதிந்து வைக்கப்பட்ட ஞானம்”

என்று எழுதி இசைவினை “பார்த்தலுக்கு அப்பாற்பட்ட அறிதல்’ ஆக அடையாளப்படுத்தி இருக்கிறேன்.  

லயம், இசைவு ஆகியவையெல்லாம் பெரிய விஷயங்கள், சந்தம் மட்டுமேதான் நாம் கைக்கொள்ளத்தகுந்தது என்ற முடிவுக்கு நான் வந்தபோது The Guava's Cadence கவிதையில் என்னுடைய கண்டுபிடிப்பை  

“Here is the heart of it:

the metre does not belong to us.

We borrow its pulse

from the ribs of the earth,

from the roots of neem trees,

from the dark lungs of the cosmos.

Our words are small boats

carried by its current.

They may capsize;

they may reach a far shore

.But the metre flows on,

a silent river under the skin

of language.” என்று எழுதினேன்.  

அதே கவிதையில் வேறொரு இடத்தில்,

“Even the guava has its cadence.

Its flesh snaps under the bite;

its juice follows gravity’s beat.

I wrote about guavas and time:

their curves

 their cores 

their tartness

the way they vanish

into the compost of endings.

The metres argued back,

their vowels lapping like waves:

“A guava is also a clock.

The seeds are seconds.

The skin is the frail boundary

between now and no longer.”  

என்று எழுதியபின் என் மனம் சாந்தியடைந்துவிட்டது. 

---

மீள்

No comments: