விளாடிமிர் நபக்கோவின் “விரக்தி” நாவலை புகழ்பெற்ற ஜெர்மானிய புது அலை சினிமா இயக்குநர் ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பைண்டர் (1945-1982) 1978 ஆம் ஆண்டு திரைப்படமாக எடுத்தார். ஃபாஸ்பைண்டரின் திரைப்படங்கள் உணர்ச்சிகளை தீவிரமாக ஆனால் பெர்டோல்ட் பிரக்டின் விலகலோடு ஆராய்பவை. ஃபாஸ்பைண்டரின் மாஸ்டர்பீஸ் ஜெர்மானியத் திரைப்படங்களாகக் கருதப்படும் Ali: Fear Eats the Soul (1974) and The Marriage of Maria Braun (1979), ஆகிய படங்கள் ஜெர்மனியின் நாஜிக்கள் கால ஃபாசிசம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் காணாமல் போய்விடல்லை, மாறாக ஃபாசிசம் உள்நாட்டுக்குரூரமாகவும், முதலாளித்துவமாகவும், வெளியாட்களை சமூகத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளக்கூடியதாகவும் உருமாறியது என்று எடுத்து இயம்பின. ஃபாஸ்பைண்டர் அவருடைய படங்களில் தனித்துவமான கேமரா கோணங்களையும் ஒளியூட்டல்களையும் பயன்படுத்தினார். அதனால் அவருடைய கதாபாத்திரங்கள் ஏதோ ஒரு சூழலில் சிக்கிக்கொண்டவர்கள் போலவேத் தோற்றமளிப்பார்கள். சமூகச் சூழல்களுக்குள் தப்பிக்க இயலாதபடிக்கு சிறைப்பட்ட கதாபாத்திரங்களை இப்படியாக தன்னுடைய stylised film making மூலமாகவே ஃபாஸ்பைண்டரினால் காட்ட முடிந்தது. (கேமரா: Michael Ballhaus). ஃபாஸ்பைண்டரின் திரைப்படங்களை மறைந்த நண்பர் வெங்கடேஷ் சக்கரவர்த்தி, நான், இன்னும் பல நண்பர்கள் சென்னை ஃபிலிம் சொசைட்டியில் பார்த்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
விளாடிமிர் நபக்கோவின் நாவலை ஃபாஸ்பைண்டர் திரைப்படமாக்கியது அவருடைய படங்களில் பல காரணங்களால் தனித்துவம் மிக்கதாய் இருக்கிறது. “விரக்தி” திரைப்படம் மட்டுமேதான் ஃபாஸ்பைண்டர் இயக்கிய ஆங்கில மொழித் திரைப்படம். இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் உலகப்புகழ் பெற்ற நாடகாசிரியர் டாம் ஸ்டாப்பர்ட் ( Tom Stoppard). நான் இங்கிலாந்தில் ஒருமுறை டாம் ஸ்டாப்பர்ட்டின் மனைவியைச் சந்திக்க நேர்ந்தபோது அவரிடம் டாம் ஸ்டாப்பர்ட் ஃபாஸ்பைண்டருடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்தது என்று கேட்டேன். அதற்கு அவர் ஃபாஸ்பைண்டர் ஒரு உக்கிரமான ஆளுமை, அவருடன் சேர்ந்து யாரும் அவ்வளவு எளிதாக வேலை செய்ய இயலாது என்று பதிலளித்தார்.
திரைக்கதையில் டாம் ஸ்டாப்பர்ட் நாவலிலிருந்து பெரிதாக விலகிச் செல்லவில்லை. ஆனால் ஃபாஸ்பைண்டர் தன்னுடைய தனித்துவம் மிக்க திரைமொழியால் நாவலுக்கு புது வடிவத்தை வழங்கினார். படத்தில் நாவலின் கதைசொல்லியும் கதாநாயகனுமான ஹெர்மன் கண்ணாடிகள், இதர பிரதிபலிக்கும் மேற்புறங்கள், பல்லிணைப்பு கொண்ட சட்டகங்களின் வழி காட்டப்படுக்கிறான். ஒரு காட்சியில் ஹெர்மன் தன்னுடைய மனைவியோடு உடலுறவு கொள்வதை படுக்கை அறையின் மூலையில் ஒரு நாற்காலியில் அமர்ந்து இன்னொருவனாகப் பார்க்கிறான். ஹெர்மன் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்துபோய் பைத்திய நிலைக்குள் இறங்குவது நாவலை விடத் திரைப்படத்தில் காட்சிகளால் அனுபவமாகிறது.
நபக்கோவின் “விரக்தி” நாவல் இலக்கியத்தில் ஒரு மாஸ்டர்பீஸ் என்றால், ஃபாஸ்பைண்டரின் திரைப்படம் இன்னொரு மாஸ்டர்பீஸ்.
ஃபாஸ்பைண்டரின் திரைப்படத்தில் கடைசிக் காட்சியில் ஹெர்மன் போலீஸினால் கைது செய்யப்படும் காட்சியில், தான் ஒரு சினிமா நடிகன் எல்லாமே நடிப்புதான் என்று சொல்வான். அதாவது அது வரை அவன் தான் நிஜ வாழ்க்கை வாழ்பவனல்ல ஒரு திரைப்படத்திற்குள் வாழும் புனைவு என்றே பிரேமை கொண்டிருந்தான் என்று தெரியவரும். போருக்கு பிந்தைய ஜெர்மனி அப்படித்தான் புனைவுகளின் பிரேமைக்குள் ஆழ்ந்திருந்ததாக ஃபாஸ்பைண்டர் சொல்வதாக நாம் புரிந்துகொள்கிறோம். அதே சமயத்தில் சமகாலத் தமிழ்நாடும் திரைப்படங்களின் புனைவுகளுக்குள்ளேதானே வாழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் நமக்குத் தோன்றும்.
https://www.youtube.com/watch?v=JukHRRB-jyk
No comments:
Post a Comment