Saturday, November 26, 2011

தெளிவற்ற கனவது




'கலை மான்' கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம்



உள் முகம் நோக்கி ஓடிய 
கலை மானுக்கு கொம்பு
விருட்சமாகவே விரிந்திருந்தது
விருட்சம் வனமாக
வனம் வானாக
வான் வளியாக
வளி மண்டலமாக
மண்டலம் மண்ணாக
மண் பொன்னாக
பொன் மானாக
மான் மாயமாக
மாயம் மீண்டும் மானாக
மயக்குகிறது மாரீசன் வித்தை

தாயேன் தாயேன் எனக்கென 
இறைஞ்சுகிறாள் சீதை

மான்கொம்பு மரமாவதில்லை
விருட்சம் வனமாவதில்லை
மரம் வெறும் மரம்
என்கிறான் இலக்குவன்

ராம பாணம் கிழித்த 
மாயை பொன்னாக
பொன் மானாக
மான் கொம்பாக
கொம்பு மரமாக
களவு போனாள்
மரம்மரம்மரம்மரம்
மரம்மரம்மரம்மரம்
என ஜெபித்த சீதை




No comments: