Tuesday, September 7, 2010

ஆற்றங்கரைத் தங்கல்

அவள் சிறு சிறு சுழிப்புகளுடன் அமைதியாகவே ஓடிக்கொண்டிருந்தாள். அவர்களோ நீண்ட பயணத்தினால் களைத்திருந்தார்கள். கரையில் தங்கலாம் என்று முடிவாயிற்று. வேறு எந்த இடமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

தங்கிய பிறகே அறிந்தார்கள் அவள் எந்த நேரமும் அவர்களை அணைத்து, ஒற்றி எடுத்துச் சென்றுவிடக் கூடியவளாம். தான் புரளும் வழிகளை மாற்றிக்கொண்டேயிருப்பாளாம். போன தடவை அவள் மலையிலிருந்து இறங்கியபோது பேராவேசத்துடன் தலைவிரி கோலமாய் பெரு மரங்களையும் சிறு கிராமங்களையும் தூக்கிப்போய் கடலில் போட்டுவிட்டு வந்தாளாம்.

அவளை எது சாந்தப்படுத்தும் என்று யாருக்குமே தெரியாதாம். அவளின் புன்முறுவைலைப் பார்த்து மயங்கிவிடக்கூடாதாம். அவளை ஆதி குடிகள் பேய்ச்சி என்றும் அழைப்பார்களாம்.

அவர்கள் தங்கள் குழந்தைகளை இறுகக் கட்டியணைத்துக் கொண்டு தூங்கத்தலைப்பட்டனர்.

அவர்களின் கனவுகள் பேரருவியில் தலைகுப்புற விழுவது, ஆழ்கடலில் தங்குவது, படுகையில் எலும்புக்கூடுகளாய் கூழாங்கற்களுடன் உருள்வது என்பதாயிருந்தன.

அவளோ அடுத்தது என்ன என்பதன் சமிக்ஞைகளற்று இயல்பாய் ஓடிக்கொண்டிருந்தாள்.

No comments: