Tuesday, September 21, 2010

குடிபெயரல்

அவர்கள் கடைசியாய் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்; தந்தையும் மகனும் போல இருந்தார்கள். இளையவன் முதியவரிடம் எரிச்சலடைந்தவனாய் சலித்துக்கொண்டே வந்தான். முதியவர் பலஹீனராயிருந்தாலும் திட மனத்துடன் முன்னேறுவராயிருந்தார். இளையவனோ உடல் பலமுள்ளவன் போல தோன்றினாலும் கோழையாய் தள்ளாடி தள்ளாடி நடந்தான்.

சாலை முழுக்க முட்டளவுக்கு சகதியும் சாக்கடையும் அருவருக்கத்தக்க அவமானம்போல மண்டியிருந்தது. கால்களை இழுத்து இழுத்து பல மணி நேரம் நடந்தது யுகாந்திரம் யுகாந்திரமாய் நடப்பது போல தோன்றியது.

பெரியவர் இளையவனை தைரியம் சொல்லி, தேற்றி கூட்டிச்செல்பவராய் இருந்தார். இளையவன் குழந்தைபோல அழுதுகொண்டே பின் சென்றான்.

தூரத்தில் நகரம் பல்லாயிரக்கணக்கான மின்விளக்குகளோடு கண்கள் விழித்தே உறங்கும் மிருகமென கிடந்தது.

நகரத்தின் ஜன சமுத்திரத்தில் முகமற்று கரைந்துவிடலாமென்று பெரியவர் உற்சாகமாய் சொல்லும்போது ஊர்த் தண்ணீரின் சுவை நினவுக்கு வர குரல் கம்மி கரகரத்தது.

சகதியின் மத்தியில் அவர்கள் நின்று சற்றே திரும்பிப் பார்த்தபோது மூட்டை முடிச்சுகளுடன் மக்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

அவர்கள் வந்து கொண்டேயிருந்தார்கள்.

No comments: