Sunday, September 5, 2010

தெருவில் இறங்கி நடந்தவன்

தெருவில் இறங்கி நடந்தவனுக்கு தெரிந்திருக்கவில்லை தான் நடப்பது தெருவல்ல பந்தய மைதானம் என்பது; கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதுதான் அவனுக்கு அது தெரியவந்தது. நடையல்ல ஓட்டமே தெருவின் எழுதப்படாத விதி என்பதும் பல பந்தயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்றும் அவன் அறிந்திருக்கவில்லை.

அவன் கீழே விழுந்திருந்தபோது பலர் எல்லைக்கோடுகளைத் தொட்டிருந்தார்கள்; பலர் கோப்பைகளை வென்றிருந்தார்கள்; பலர் வெற்றி வாகைகளை சூடியிருந்தார்கள்.

மைதானத்தின் விதிகளை வசப்படுத்தியவர்கள் விழுந்தது கணக்கல்ல என்று இறுதியாகக் கூறினார்கள். ஓடினாயா எல்லைக்கோட்டை தொட்டாயா என்பது மட்டுமே கணக்கு என்றார்கள். இது தெருதானே என்றவனை உன்னை விஞ்சிவிட்டோம் பார்த்தாயா என்று பதிலளித்தார்கள். நடக்கவே வக்கில்லை இவன் எங்கே ஓடுவான் விலாவில் ரெண்டு போடு என்றார்கள் சிலர். பரிதாபம் காட்டிய சிலர் புனிதர்கள் ஆனார்கள்.

மீண்டும் நடக்கத்தலைப்பட்டவனை கெக்கெலி சூழ்ந்திருந்தது.

விழுந்ததை காரணம் காட்டி எப்பொழுது வேண்டுமானாலும் பந்தயத்திலிருந்து நீக்கிவிடலாம் என்றிருந்தனர் சிலர்.

தெரு தன் அடையாளம் இழந்ததை அறியாமல் நீண்டு கிடந்தது.

1 comment:

Anonymous said...

Excellent post and a poem !!! I can relate to this story (poem) almost line by line. Many of my friends ?!! declared victory when i resigned my high paying job in US and while they clinging to theirs. It hurts real when your family members also write you off in the same way.

Welcome to real world :)