Sunday, September 19, 2010

படிமம்

முகப்படாம் களைந்தாயிற்று எனினும்
சிறிய சிவந்த கண்களில் சீற்றமும்
கண்ணீரும் வடிந்தபாடில்லை

ஆயிரம் வாழைகளை துவம்சம் செய்தாயிற்று எனினும்
கொல்லன் துருத்தியைப் போலியங்கும்
மூச்சு சீரானபாடில்லை

கதறி அழும் பெண்களின் ஓலமும்
சிதறி ஓடும் சேனைகளின் பேரழுகையும்
முறமென வீசும் காதுகளில் நின்றபாடில்லை

பெருவுடல் புழுதியில் புரள
பிளிரல் நாட்டையே நிறைக்க
துதிக்கை உலக்கையாய் விலுவிலுக்க
நான்கு கால்களையும் வான் நோக்கி உதறியாயிற்று எனினும்
அவலத்தின் காட்சிகள்
அகத்தில் அகலுவதாயில்லை

போரின் நினைவுகளில் பெகளம் கிளப்பும்
பெரு மிருகத்தின்
கோட்டுருவச்சித்திரம்
நம் கால
அகப் படிமம்
என்பதாகவே

No comments: