Friday, September 24, 2010

தனக்குள்ளேயேபேசிக்கொண்டதாவது

ஆழ்மன அமைதியிலிருந்து உரைநடை, கவிதை என்ற செயற்கை வேறுபாடுகளற்று இயல்பாக கவிதை வெளிப்படவேண்டும். அதிர்ச்சி ஏற்படுத்துதல், அதீத உணர்ச்சியின் வெளிப்பாடு, அலங்காரம் ஆகியன தவிர்த்தல் நல்லது. பழந்தமிழ் பாண்டித்தியம், நீண்ட கால தத்துவப் பயிற்சி கவிதைகளில் வெளிப்படாமல் இருப்பது அவசியம்.

நட்பான அந்தரங்க சுத்தியுடன் கூடிய, உரையாடல்தன்மை கொண்ட குரலை வளர்த்தெடுக்கவேண்டும்; எல்லோரையும் எல்லோரும் எந்த சமயத்திலும் கைவிட்டுவிடுவார்கள் என்றாலும்கூட.

பொதுவாக inferior forms என்று கருதப்படக்கூடிய allegory, cliché பிரகடனங்கள் போன்றவற்றில் கவிதையை வெளிப்படுத்தத் தயங்கக்கூடாது.

நமது காலத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கியச் செயல்பாடுகளுக்கு நேர் எதிரானதாக நம் கவிதை இருக்க வேண்டும்; எல்லோரும் அதிகம் எழுதுகிறார்கள் என்றால் குறைவாக எழுதினால் போதுமானது. நோக்கமற்று இருத்தல் இவ்வகையில் அதிக சுதந்திரத்தைத் தரும். எதையும் நிறைவு செய்யாமல், சிதறலாகவே வைத்திருத்தல் நல்ல உத்தி. அந்தரங்கமான சுய அனுபவங்களை எழுதும்போது தூர நின்று கவனிக்கும் பார்வை வேண்டும். என்னுடையதில்லையே, எனக்குத் தெரியாதே என்பதெல்லாம் நல்ல கவிதா பாவங்கள்.

குழந்தைகள் விளையாட்டில் காட்டும் தீவிரத்தை இலக்கிய ஆக்கத்தினுள் எளிதில் எல்லோரும் கண்டடையாவண்ணம் பொதிந்து வைத்திருத்தல் கவிதை எழுதுவதின் சுகானுபவம்.

அவ்வபோது இப்படி இலக்கணம் எழுதினாலும் அதை உதாசீனப்படுத்திவிட்டும் கவிதை எழுதத்தெரிந்திருக்க வேண்டும்.

No comments: