Tuesday, September 14, 2010

வருகை

காத்திருந்து காத்திருந்து
பல ஆண்டுகள் கழிந்தபின்
சுவாதீனமாய் வந்து சேர்ந்தாள் அவள்

கடிதங்களுக்கு பதிலெழுதாது பற்றி
எந்த விளக்கங்களும் இல்லை
காலம் தப்பிவிட்டது குறித்து
எந்த விசனமும் இல்லை
அலைக்கழிக்க விட்டது பற்றி
அறிந்தமாதிரியும் இல்லை
எல்லாமே எப்பொழுதுமே
ஒரே சீராய்
இருப்பதான பாவனையில்

மேஜை விரிப்பை சரி செய்தாள்
ஜன்னல் திரைச்சீலைகளை இழுத்து விட்டாள்
கழுவாத கோப்பைகளை
அடுக்களை அங்கணத்தில் போட்டு வந்தாள்

மேலே சுவரில் படமாய் தொங்கும்
அம்மாவின் படத்தைக் கவனிக்காமல்
கன்னத்தில் குழி விழும் சிரிப்போடு
தன் கைப்பையிலிருந்து எடுத்த
சிறு பரிசினை
‘இது உன் அம்மாவுக்காக’ என்று
நீட்டியபோது

பெருமழையும் அணைக்கவியலா
காட்டுத்தீயென எழுந்த
காமத்தை
ஒரு கை நீரினால்
சட்டென அவித்தாள்
தானறியாமல்

No comments: