Saturday, September 25, 2010

மீண்டும்

தனக்குள்ளேயேபேசிக்கொண்டதாவது

தமிழ் சினிமாப் பாடல்கள் ஏற்படுத்தும்
கிறுகிறுப்பு கவிதை எழுதுவதற்கு பெரிய சவால்.
என்ன செய்ய?

மொத்த சமூகமும் சொக்கிக்கிடக்கிறதே
குழந்தைகளும் விடலைகளுமென்றால் கேட்கவே வேண்டாம்
சன்னதம் பற்றி கூந்தல் விரித்து ஆடாத குறை
என்னதான் செய்ய?

பாடல்களினால் மனம் திரவமாகி
தளும்பிவிடுகிறது; ஆத்தாடி காத்தாடி என்பது போன்ற
எளிமையான சந்தங்களுக்குகூட
இளம் பெண்களின் குரல்கள்தான் என்றில்லை
எல்லா குரல்களுமே தமிழில் பாடும்போது
மனத்தை பறிகொடுக்கத்தான் வேண்டியிருக்கிறது
என்னதான் மக்கா செய்ய?

ஆத்மாவைக் கரைத்து உங்கள் கண்களுக்கு அஞ்சன மை தீட்டுகிறேன்
பாடலாசிரியர்களே, பாடகர்களே, இசையமப்பாளர்களே
(இப்போது புதியதாய் சேர்த்துக்கொள்ள வேண்டியது)
இசை விமர்சகர்களே
என் சகல வெளிகளையும் ஆக்கிரமித்து
என்னைத் தொடர்ந்து கிளர்ச்சியூட்டாதீர்கள்

நான் எனக்கான கவிதைகளை எழுதக்கிளம்பியிருக்கிறேன்.

No comments: